மாடுகளை விற்க மத்திய அரசு விதித்த புதிய கட்டுப்பாடுகளுக்கு தடை இல்லை.. சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: இறைச்சிக்காக கால்நடைகளை விற்கக் கூடாது என்ற மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
மாமிசத்துக்காக மாடு, எருது, ஒட்டகம், கன்றுக் குட்டி உள்ளிட்ட கால்நடைகளை விற்கக் கூடாது என்று மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை கடந்த மாதம் விதித்தது. மேலும் மாட்டிறைச்சிக்கும் தடை விதித்தது. இதனால் கேரளா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அரசுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
மேலும் மத்திய அரசின் கட்டுப்பாடுகளை திரும்ப பெறக் கோரியும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்பட்டன. மாடுகளை விற்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் மாடு வளர்ப்போர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பால் கறக்க முடியாத மாடுகள்
மேலும் தீவனத்தின் விலையும் அதிகம் என்பதால் பால் கறக்க முடியாத மாடுகளை விற்பனைக்கு கொடுக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர். இது அடிதட்டு மக்களின் பிரச்சினை என்பதால் இந்த புதிய கட்டுப்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
அந்த வழக்குகள் மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாடு விற்பனையில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கவே இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாகவும், இது சாதாரண மாடு விற்பனையாளருக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் வாதிட்டார்.

மாட்டு நலன் பாதுகாக்கப்படுகிறது
மாடுகளை விற்க பெயர், முகவரி, அடையாள அட்டை ஆகியவை சமர்ப்பித்து புதிதாக அமைக்கப்பட்ட குழுவிடம் கையெழுத்து வாங்கி மாடு விற்பதன் மூலம் அதன் நலன் பாதுகாக்கப்படுகிறது என்றும் வாதிட்டார்.

இடைக்காலத் தடை கிடையாது
இதையடுத்து நீதிமன்றம் உத்தரவிடுகையில், மாடு விற்பனைக்கு விதித்த புதிய கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசு 3 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கை ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன் என்று கூறி மத்திய அரசின் கட்டுப்பாடுகளுக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.












Click it and Unblock the Notifications