நீதிபதிகள் நியமன விவகாரம்: நீதித்துறையை முடக்குவதா? மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் வார்னிங்
டெல்லி: நீதிபதிகள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் நீதித்துறையை மத்திய அரசு முடக்கப் பார்ப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் போன்ற முடிவுகளை நீதிபதிகளைக் கொண்ட 'கொலிஜியம்' எடுத்து வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, 4 மூத்த நீதிபதிகள் அடங்கிய அமைப்புதான் கொலிஜியம்.
இந்த கொலிஜியத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் தொடர் கதையாக உள்ளது. கொலிஜியத்தின் முடிவை நிராகரிக்கும் உரிமை தங்களுக்கு வேண்டும் என்று விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் செய்ததை கொலிஜியம் ஏற்கவில்லை. இதுதொடர்பான திருத்தப்பட்ட விதிமுறையை கடந்த மே 28-ந் தேதி மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியது.
மத்திய அரசுடன் மோதல்
இந்நிலையில் நாடு முழுவதும் காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மத்திய சட்ட அமைச்சகத்துக்கு உத்தரவிடக்கோரி ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி அனில் கபோத்ரா உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது நேற்று மத்திய அரசுடன் உச்சநீதிமன்றம் நேரடியாக மோதியது.
சீர்குலையும் நீதித்துறை
தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையில் 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கியை பார்த்து நீதிபதிகள் கூறியதாவது:
நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் 40 லட்சம் வழக்குள் தேங்கி உள்ளன. நீதிபதிகள் காலி இடங்களின் எண்ணிக்கை 43% ஆக அதிகரித்துள்ளது. இதனால் சில கைதிகள் 13, 14 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். ஒட்டுமொத்த நீதித்துறையும் சீர்குலைந்து வருகிறது.
அவநம்பிக்கை ஏன்?
நாங்கள் 75 உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பாக முடிவு செய்து, அதுதொடர்பான கோப்புகளை மத்திய அரசின் ஒப்புதலுக்காக 8 மாதங்களுக்கு முன்பு அனுப்பி இருந்தோம். ஆனால், மத்திய அரசு இதுவரை அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஏன் இந்த அவநம்பிக்கை?
பொறுத்துக் கொள்ள முடியாது...
அந்த கோப்பு ஏன் முடங்கி கிடக்கிறது, எங்கே முடங்கி கிடக்கிறது என்று எங்களுக்கு தெரியவில்லை. மத்திய அரசு, நீதித்துறையை முடக்கப்பார்க்கிறது என்றே தோன்றுகிறது. இந்த முட்டுக்கட்டையை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். மத்திய அரசுக்கு பொறுப்பு உண்டாக்க நாங்கள் தலையிட வேண்டி இருக்கும். மத்திய அரசுக்கு அனுப்பிய கோப்புகளை திரும்ப கேட்க வேண்டி இருக்கும்.
விளைவுகள்...
மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காததால், நியமிக்க வேண்டிய, இடமாற்றம் செய்ய வேண்டிய நீதிபதிகளை நியமிக்கவோ, இடமாற்றம் செய்யவோ முடியவில்லை. தலைமை நீதிபதி நியமனம் கூட நிலுவையில் இருக்கிறது. குறிப்பாக, ஆந்திர உயர்நீதிமன்றம், வெறும் 40% நீதிபதிகளுடன் இயங்கி வருகிறது.
நல்லது அல்ல...
இதையெல்லாம் நாங்கள் விரும்பவில்லை. ஏதேனும் குறிப்பிட்ட நீதிபதிகள் குறித்து மத்திய அரசுக்கு ஆட்சேபனை இருந்தால், மறுபரிசீலனை செய்யுமாறு எங்களிடம் தெரிவிக்கலாம். இந்த முட்டுக்கட்டை நல்லது அல்ல.
காரணம் தேவை இல்லை..
நீதிபதிகள் நியமனம் தொடர்பான விதிமுறைகள் இறுதி செய்யப்படாததை காரணமாக சொல்லக்கூடாது. ஏனென்றால், விதிமுறைகள் இறுதி செய்யப்படாததற்காக நீதிபதிகள் நியமனத்தை நிறுத்தக்கூடாது என்று ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அட்டார்னி ஜெனரல், மத்திய அரசிடம் தேவையான உத்தரவை பெற்று, எங்களிடம் சொல்ல வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
நோட்டீசு அனுப்ப வேண்டாமே..
இதற்கு அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, இந்த பிரச்சினையை மேல்மட்ட அளவில் எடுத்துச் சென்று, நீதிமன்றத்திடம் திரும்ப வந்து சொல்வேன். எனவே, மத்திய அரசுக்கு நோட்டீசு அனுப்பி விடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அட்டர்னி ஜெனரலுக்கு 4 வார கால அவகாசம் அளித்தனர்.