நித்யானந்தாவால் பாலுறவில் ஈடுபட முடியும்: பெங்களூர் கோர்ட்டில் சிஐடி போலீசார் அறிக்கை தாக்கல்!
பெங்களூரு: சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவால் உடல் ரீதியான பாலுறவில் ஈடுபட முடியும்... அவர் ஆண்மை உள்ளவர் என்று கர்நாடக சிஐடி போலீசார் ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தா மீது அவரது முன்னாள் சிஷ்யை ஆர்த்தி ராவ் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். ஆனால் நித்யானந்தா தனக்கு ஆண்மை இல்லை எனக் கூறி குற்றச்சாட்டை மறுத்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கர்நாடக சிஐடி போலீஸார் ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் கடந்த செப்டம்பர் 8-ந் தேதி பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரி சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் நித்யானந்தா மீதான பாலியல் பலாத்கார வழக்கு கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. நித்யானந்தாவும் சீடர்களும் நீதிமன்றத்துக்கு வந்தனர்.
அப்போது கர்நாடக சிஐடி போலீசார் தரப்பில், நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை அறிக்கை சீல் வைக்கப்பட்ட நிலையில் தாக்கல் செய்யப்பட்டது. அதைப் பெற்றுக்கொண்ட நீதிபதி மஞ்சுளா, இந்த வழக்கில் அனைத்து விசாரணையும் முடிந்துவிட்டது. குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு இறுதி வாதத்தை வரும் 27-ந் தேதி தொடங்குங்கள்.
குற்றம்சாட்டப்பட்டவர் வரும் பிப்ரவரி 11-ந் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்திரவிட்டார்.
நீதிமன்றத்தில் சிஐடி போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில், நித்யானந்தாவுக்கு 37 வயதான ஆணுக்கு இயல்பாக இருக்கக்கூடிய அனைத்து உடல் வளர்ச்சியும் இருக்கிறது. அவரால் உடல் ரீதியான பாலுறவில் ஈடுபட முடியும். அதனால் அவருக்கு ஆண்மை உள்ளவர் என மருத்துவர் குழு சான்று அளித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.