பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்ல தயங்கும் 69% பெண்கள்... காரணம் பயம்!
பணிபுரியும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகளைப் பற்றி 69% பேர் புகார் அளிப்பதில்லை என்று தெரியவந்துள்ளது. இதுவே குற்றவாளிகளுக்கு சாதகமாகிவிடுகிறது.
ஹைதராபாத்: வேலை செய்யும் இடங்களில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் பெண்களில் கிட்டத்தட்ட 69% பேர் காவல் நிலையங்களில் புகார் அளிப்பதில்லை.
தெலுங்கானாவில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசிய தேசிய மகளிர் ஆணையத்தின் செயலாளர் சாத்பிர் பேடி இதனை தெரிவித்துள்ளார்.பயம் தயக்கம் காரணமாகவே பெண்கள் புகார் அளிக்க தயங்குகின்றனர், இதுவே குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.
பணிபுரியும் இடங்களில் பெண்களை உடல் ரீதியாக தொடுவது, நெருங்கி வருவது, பாலியல் தேவைகளுக்காக வற்புறுத்துவது, பாலியல் வார்த்தைகளைப் பயன்படுத்தி அத்துமீறி பேசுவது, ஆபாசமாக பேசுவது, ஆபாசப் படம் காட்டுவது, தேவையில்லாமல் அருகே வந்து பேசுவது உள்ளிட்டவை பாலியல் தொந்தரவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன
பாலியல் தொல்லை
வளர்ந்த நாடுகளில் மட்டுமல்ல வளரும் நாடுகளிலும் உலகில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன. எத்தனையோ கஷ்டங்கள், குடும்ப சூழ்நிலைகளினால் பணிக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடம் கிடைப்பது அரிதாக உள்ளது.
பகிரங்க அழைப்பு
அலுவலங்களில் பெண்கள் பார்க்கும் போது ஆபாச செய்கைகள், கீழ்த்தரமான கருத்துகள், தவறான எண்ணத்தில் தொட்டு பேசுதல், நேரடியாக பாலியல் உறவுக்கு அழைத்தல், உடல் ரீதியாக துன்புறுத்துதல் உள்ளிட்ட பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கிறது.
3 மாத விடுமுறை
அலுவலகத்தில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் மத்திய அரசு பெண் ஊழியர்கள், 3 மாத காலத்திற்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மன ரீதியான உளைச்சல்களிலிருந்து மீண்டு வர இந்த விடுமுறை சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு மற்றும் குறை தீர்ப்பு சட்டம் 2013ல் இதுதொடர்பாக திருத்தம் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.
கருத்தரங்கம்
தெலங்கானா மாநில அரசின் மகளிர் ஆணையமும் தேசிய மகளிர் ஆணையமும் இணைந்து வேலை செய்யும் இடத்தில் பெண்கள் மீதான பாலியல் தொந்தரவு தடுப்பு திருத்தச் சட்டம் (2013) பற்றிய கருத்தரங்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தது. இதில் பங்கேற்று பேசிய தேசிய மகளிர் ஆணையத்தின் செயலாளர் சாத்பிர் பேடி வேலை செய்யும் இடங்களில் பாலியல் தொந்தரவுக்குள்ளாகும் பெண்களில் 69 சதவிகித பெண்கள் அதைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளிப்பதில்லை என்றார்.
தண்டிக்கும் சட்டம்
இதனால், பாலியல் தொந்தரவு செய்பவர்களைத் தண்டிக்கும் சட்டம் பற்றி பெண்களுக்கு அதிக விழிப்பு உணர்வு தேவைப்படுகிறது. சுரண்டலிலிருந்து பெண்களைப் பாதுகாக்க மிகப்பெரிய சட்டங்களும் திட்டங்களும் உள்ளன. இந்தச் சட்டங்களில் தவறுகள் இல்லை.
துஷ்பிரயோகம்
இது தொடர்பான திட்டங்களிலும் பொய்கள் இல்லை. இந்தச் சட்டங்களை அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் அல்லது துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதிலேயே இந்தச் சட்டங்களின் முக்கியத்துவம் இருக்கிறது. இதற்கான தேர்வுகளை மக்களே உருவாக்குகிறார்கள் என்று கூறினார்.
குற்றவாளிக்கு சாதகம்
பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பெரும்பாலும் வெளியில் சொல்லாமல் போவதற்கு பல காரணங்கள் உள்ளன. காரணம் நான்கு சுவருக்குள் நடப்பது ஊருக்கே தெரிந்துவிடுகிறதே என்ற தயக்கம்தான். இதுவும் குற்றம் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.
பிரச்சினைக்குத் தீர்வு
வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி ஆண் உயர் அதிகாரிகளுக்கு மனநலப் பயிற்சி முகாம்கள் வழங்குவது போன்ற சிற்சில முயற்சிகளை முன்னெடுத்தால் மட்டுமே வரும்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் நிகழாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.