சிக்கலில் “கீரின்பீஸ் இந்தியா” – பாலியல் புகார்கள் குவிவதால் விரைவில் மூடுவிழா?
டெல்லி: சுற்றுச்சூழல் உரிமைகள் குறித்த சமூக நிறுவனமான கீரின்பீஸ் இந்தியா விரைவில் மூடப்படும் தருவாயில் உள்ளது. அந்நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் தன்னுடைய சக ஊழிய நண்பர்களாலேயே பாலியல் துன்புறுத்தல்களை அனுபவித்ததாக புகார் அளித்துள்ளதால் இந்நிறுவனம் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது.
நிறுவனத்தின் பங்குதாரர்கள் மீதும் இந்தப் புகார்கள் எழுந்துள்ளன. இப்பெண் ஊழியரின் புகாரினைத் தொடர்ந்து அங்கு பணிபுரிந்த பல பெண்கள் வெளியே வந்து தாங்கள் அனுபவித்த இன்னல்களை சொல்லத் துவங்கியுள்ளனர். மேலும், நிறுவன மேலாண்மைக்கு இவை குறித்து புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அப்பெண்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இந்நிறுவனத்தின் வங்கி கணக்குகள் சரியான வகையில் இல்லை என்று டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இச்சிக்கலில் சிக்கியுள்ளது கீரின்பீஸ்.
புகார் அளித்த பெண் ஊழியர், தான் அந்நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்தில் சேர்ந்த 1 வருடத்தில் இந்த பிரச்சினை ஆரம்பித்தாகவும், சக ஊழியர் தன்னை அவருடன் வந்து தங்க வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பிறந்தநாள் கேக் ஊட்டும் சாக்கில் அவர் அப்பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார்.
இதுதொடர்பாக மனிதவளத் துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதே போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் அதிக அளவில் அந்நிறுவனத்திற்குள் நடைபெற்றுள்ளது வெளிவரத் துவங்கியுள்ளதால், விரைவில் "கீரின்பீஸ் இந்தியா" மூடப்படும் என்று தெரிகின்றது.
மன்னிப்பு கோரிய கீரின்பீஸ் இந்தியா:
இந்நிலையில் கடந்த பிப்ரவரி வரையில் இதுகுறித்த புகார்கள் தங்களுக்கு வரவில்லை என்றும், இப்புகார்கள் குறித்து நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பிற்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.