தூள்தூளானது ”400 வருடத் தடை”- சனிசிங்னாபூர் கோவில் கருவறைக்குள் பெண்கள் வழிபட அனுமதி!
மும்பை: மகாரஷ்டிராவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சனிசிங்னாபூர் சனிபகவான் கோவில் கருவறையில் பெண்கள் வழிபடுவதற்கு இனி தடை இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டம் நெவசா தாலுகாவில் சிங்னாபூர் என்னும் கிராமத்தில் சனிபகவானுக்கு கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலின் கருவறைக்கு சென்று வழிபட பெண்களுக்கு பலநூறு ஆண்டுகளாக தடை இருந்து வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூமாதா பெண்கள் படை என்ற அமைப்பினர் அதன் தலைவர் திருப்தி தேசாய் தலைமையில் அண்மைக்காலமாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
அசையாத நிர்வாகம்:
எனினும் கோவில் நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை. போராட்டம் வலுத்ததால் ஆண்களையும் கோவில் கருவறைக்குள் அனுமதிக்க கோவில் நிர்வாகம் மறுத்தது.
நீதிமன்றம் உத்தரவுள்
கோவில் கருவறைக்குள் பெண்கள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து பூமாதா அமைப்பினர் மும்பையில் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
பெண்கள் வழிபட உரிமை:
வழக்கு விசாரணையின்போது கோவில் நிர்வாகத்தின் செயல்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஹைகோர்ட், பெண்கள் கோவிலுக்கு சென்று வழி அடிப்படை உரிமை உள்ளது. எனவே அவர்கள் சனிபகவான் கோவில் கருவறையில் சென்று வழிபாட எந்த தடையும் இல்லை. அவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் வழிபட மாநில அரசு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கடந்த 1 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அனுமதித்த அறங்காவலர்கள்:
இந்த நிலையில் கோவில் அறங்காவலர்கள் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது கோவில் கருவறைக்குள் பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கிக் கொள்வது எனவும், கோவில் கருவறையான சவுதாராவுக்குள் நுழைவதற்கு ஆண்கள், பெண்கள் என அனைவரையும் அனுமதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மகிழ்ச்சியில் பெண்கள்:
மகாராஷ்டிராவின் புத்தாண்டு தினமான "குடி பட்வா" நேற்று பிறந்தது. அந்த நாளில் இந்த அறிவிப்பை கோவில் வெளியிடப்பட்டது மராட்டிய பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.