சுனந்தா கொலை - அரசியல் நிர்பந்தம் இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும்: சசி தரூர்
திருவனந்தபுரம்: தமது மனைவி சுனந்தா மரணம் குறித்து எந்த ஒரு அரசியல் நெருக்கடிக்கும் உள்ளாகாமல் விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.
சசி தரூரின் மனைவி சுனந்தா ஓராண்டுக்கு முன்பு டெல்லி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மர்மமாக உயிரிழந்து கிடந்தார். இந்த மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து டெல்லி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுனந்தா கொலை செய்யப்பட்டார் என்றும் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகவும் டெல்லி போலீசார் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு சசி தரூருக்கும் டெல்லி போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதனிடையே திருவனந்தபுரத்தில் சசிதரூர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சுனந்தா உயிரிழப்பில் சதி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததால் நான் எதுவும் பேசாமலும் இருந்தேன். சுனந்தா கொலை செய்யப்பட்டதாக டெல்லி போலீஸ் அறிக்கை வெளியிட்டிருந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இந்த விசாரணையை அரசியல் நெருக்கடிகளுக்குள்ளாகாமலும் முன்கூட்டியே ஒரு முடிவெடுத்துவிட்டு அதன் பேரில் விசாரணையை நடத்தாமலும் நேர்மையாக நடத்த வேண்டும் என்றுதான் விரும்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications