மூத்த தலைவர்களை ஓரம் கட்டுவது நல்லதல்ல – ஷீலா தீட்சித் புது குண்டு!
டெல்லி: காங்கிரஸின் மூத்த தலைவரான ஷீலா தீட்ஷித் வயதைக் காரணம் காட்டி மூத்த தலைவர்களை கட்சியில் இருந்து ஓரம் கட்டுதல் முறையற்ற செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்குள் மிகப்பெரிய அளவில் உட்கட்சி பூசல்கள் உருவாகியுள்ளன. ராகுலின் தலைமையில் தேர்தலை சந்தித்து தோற்றுப்போனதை அடுத்து அவருக்கு எதிராக குரல்கள் கிளம்பின.
கடந்த சில வாரங்களாக கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் வெளிப்படையாகவே சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தனர்.
ராகுல் பற்றி விமர்சனம்:
குறிப்பாக திக்விஜய் சிங் மகாராஷ்டிர முதல்வர் பிரிதிவி ராஜ் சவான் உள்ளிட்டோர் ராகுலை விமர்சிக்கும் வகையில் பேசினர்.
இளம் தலைமுறை:
இது கட்சியின் இளைய தலைமுறை நிர்வாகிகளை கொதிப்படைய வைத்தது.இதையடுத்து அவர்கள் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினர்.
பெரும் தலைவலி:
காங்கிரசில் அகில இந்திய நிர்வாகிகளில் 12 பேர் பொதுச் செயலர்கள். இவர்கள் அனைவருமே மூத்தவர்கள். வயதாகிவிட்ட நிலையிலும் பதவிகளை விட்டுவிடாமல் பலரும் இருக்கின்றனர். ராகுலுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பவர்கள் இவர்கள் தான்.
ஓரம் கட்டும் நடவடிக்கை:
எனவே இவர்களை கட்சியிலிருந்து ஓரம் கட்டுவதற்கான நடவடிக்கையை ராகுல் விசுவாசிகள் துவக்கியுள்ளனர்.
மேலிடமும் அனுமதி:
இதற்கு காங்கிரஸ் மேலிடமும் சம்மதித்து உள்ளதாக கூறப்படுகிறது. கட்சி மேலிடத்தின் இந்த முடிவு மூத்த தலைவர்களை கொதிப்படைய வைத்துள்ளது.
முறையற்ற நடவடிக்கை:
இதுகுறித்து காங்கிரஸின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்ஷித் தனியார் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், "வயதை காரணம் காட்டி மூத்த தலைவர்களை கட்சி பதவிகளில் இருந்து ஓரம் கட்டுவதை ஏற்க முடியாது. இது சரியான நடவடிக்கை அல்ல.
தகுதி, திறமைதான் முக்கியம்:
ஒவ்வொருவரையும் தகுதி, திறமை, செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிட வேண்டுமே தவிர வயதை காரணமாக கூறி ஓரம் கட்டக் கூடாது.
அவர்கள் மட்டும் காரணமல்ல:
லோக்சபா தேர்தல் தோல்விக்கு ராகுலையும், சோனியாவையும் மட்டும் பொறுப்பாக கூற முடியாது.
அனைவருக்கும் பொறுப்பு:
காங்கிரஸ் பெரிய கட்சி. அதில் ஏராளமான தலைவர்கள் உள்ளனர். கட்சியின் செயல்பாடுகளில் அனைவருக்குமே பொறுப்பு உள்ளது" என்று கூறியுள்ளார்.