தந்தை பெயரில் மகனை கவிழ்க்க திட்டம்.. அதிருப்தி எம்எல்ஏ குழுவுக்கு “சிவசேனா பாலாசாகேப்” எனப்பெயர்
கவுஹாத்தி: உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக அசாமில் முகாமிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏக்கள் குழுவிற்கு சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேவின் பெயரை கொண்ட "சிவசேனா பாலாசாகேப்" என பெயரிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.
ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
”குடும்பம் இங்க தானே இருக்கு..” செக் வைத்த உத்தவ் - பதறிப்போன சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள்
குதிரை பேரம்
சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு மொத்தம் 169 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்த ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை பல வகைகளில் வளைக்க முயன்றது பாஜக. அதன் பயனாக மாநிலங்களவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தலில் பாஜகவின் ஆட்டத்துக்கு ஓரளவு வெற்றி கிடைத்தது.
அதிருப்தி எம்.எல்.ஏக்கள்
இந்த நிலையில் கடந்த 21ம் தேதி பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான 34 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டனர். அதன் பின்னர் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கடந்த 2 நாட்களில் மட்டும் மேலும் 5 எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 39 ஆக அவர்களின் பலம் அதிகரித்துள்ளது.
உத்தவ் தாக்கரே
இந்த நிலையில் பேஸ்புக் லைவில் தொண்டர்களுக்கு உரையாற்றிய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சிவசேனா எம்.எல்.ஏக்கள், நான் முதல்வர் பதவியில் நீடிக்கக் கூடாது என விரும்பினால் முதல்வர் பங்களாவில் இருந்து அப்படியே வெளியேற தயாராக இருக்கிறேன்." என்று கூறினார். இதையடுத்து அவர், முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வ மாளிகையான வெர்சா இல்லத்திலிருந்து பெட்டியுடன் தனது சொந்த வீட்டுக்கு புறப்பட்டார்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
அரசுக்கு எதிராக அசாம் ஹோட்டலில் முகாமிட்டிருந்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 23 ஆம் தேதி அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதினர். அதன்பின்னர் அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் பேசிய அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே "ஒரு தேசிய கட்சி.. "மகாசக்தி". உங்களுக்கு தெரியும், அவர்கள் பாகிஸ்தானை வீழ்த்தினர். அவர்கள் நமக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். அனைத்து உதவிகளையும் செய்வதாக அறிவித்துள்ளனர்." என்றார்.
பாதுகாப்பு நீக்கம்
இந்த நிலையில், அசாமில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் உத்தவ் தக்கரே, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலிப் வால்சே பாட்டில், டிஜிபி ரஜ்னிஷ் சேத் மற்றும் அனைத்து காவல் ஆணையர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், "தங்கள் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மகாராஷ்டிரா அரசு வாபஸ் பெற்றுவிட்டதாக கூறியுள்ளனர். பழிவாங்கும் விதமாக சட்டவிரோதமான முறையில் பாதுகாப்பு பறிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடிதம்
மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி அரசின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் தங்கள் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும், அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சஞ்சய் ராவத் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களுமே காரணம் என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.
சிவசேனா பாலாசாகேப்
இன்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் குழு யோகா முகாம் என விமர்சிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான ஊடகங்கள் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் என்றும், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் என்றும் அவர்களை அறிமுகப்படுத்துகின்றன. இந்த நிலையில் தங்கள் குழுவின் பெயர் "சிவசேனா பாலாசாகேப்" என வைக்கப்பட்டு இருப்பதாக எம்.எல்.ஏ தீபக் கேசர்கார் தெரிவித்து உள்ளார். தாங்கள் எந்த கட்சியோடும் இணைய மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
ஏக்நாத் ஷிண்டே விளக்கம்
இதுகுறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே, "என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். ஆனால், சிவசேனாவின் பெயரையும் பாலாசாகேப் தாக்கரேவின் பெயரையும் பயன்படுத்தாதீர்கள்." என்று தெரிவித்திருந்தார். இது குறித்து தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த ஏக்நாத் சிண்டே, நாங்கள் பாலாசாகேபின் சிவ சைனிகர்கள். தனி அணியை உருவாக்க நாங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை." என்றார்.