நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு சிவசேனா ஆதரவா, எதிர்ப்பா?: மகாராஷ்டிரா சஸ்பென்ஸ் நீடிப்பு
மும்பை: மகாராஷ்டிர சட்டசபையில் சிவசேனையின் தயவு இன்றியே பெரும்பான்மையை நிரூபிக்க போவதாக பாஜக அறிவித்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிவசேனை முக்கிய தலைவர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும்போது அதை எதிர்த்து வாக்களிக்க சிவசேனை முடிவு செய்திருக்க கூடும் என்றும் தெரிகிறது.
தனிப்பெரும் கட்சி பாஜக
மகாராஷ்டிர மாநில சட்டசபையில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 121 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க 145 உறுப்பினர்கள் அவசியம். இத்தேர்தலில் பாஜகவுக்கு அடுத்தபடியாக சிவசேனா 63 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு கட்சிகளுமே 25 வருடகாலமாக நட்பாக இருந்து தொகுதி பங்கீடு பிரச்சினையினால் தேர்தலுக்கு முன்புதான் பிரிந்து தனித்தனியாக போட்டியிட்டன. எனவே ஆட்சியமைக்க சிவசேனா ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல சிவசேனாவும் ஆட்சியில் பங்குபெற தயார் என கூறியது.
திடீர் வரவு தேசியவாத காங்கிரஸ்
ஆனால் அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்கள் தங்களுக்கு வேண்டும் என்று சிவசேனா கேட்டுக்கொண்டது. இதற்கு பாஜக மறுத்துவிட்டது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க தயார் என்று அறிவித்துள்ளது. இதனால் சிவசேனாவால் பேரம் பேரம் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் பங்குபெற்றாலே போதும் என்ற நிலை சிவசேனாவுக்கு வந்துள்ளது.
சிவசேனாவுக்கு டிமிக்கி
தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைத்ததை தொடர்ந்து முதல்வராக தேவேந்திர பட்னாவிசும், மேலும் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். 12ம்தேதி மகாராஷ்டிர சட்டசபையை கூட்டி தனது பெரும்பான்மையை பட்னாவிஸ் நிரூபிக்க உள்ளார். சிவசேனாவுக்கு அமைச்சரவையில் இடம் தருவீர்களா என்று நிருபர்கள் பட்னாவிசிடம் கேட்டதற்கு, "முதலில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டுதான் அமைச்சரவையை விஸ்தரிப்பு செய்வேன்" என்று கூறிவிட்டார்.
சிவசேனாவுக்கு வேறு வழியில்லை
ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு சிவசேனா ஆதரவு அளித்துவிட்டால், அதன்பிறகு அவர்களுக்கு அமைச்சரவையில் பாஜக இடம் தரும் என்பதில் என்த நிச்சயமும் இல்லை. எனவே இப்போதே அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய வேண்டும், அல்லது ஆதரவு தர முடியாது என்று சிவசேனா சொல்ல வாய்ப்புள்ளது. இருப்பினும், சிவசேனா ஆதரவு தராவிட்டால் தேசியவாத காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பாஜக அரசுக்கு ஆதரவு அளித்துவிடும். எனவே, பாஜகவை நம்பி அவர்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதை தவிர சிவசேனாவுக்கு வேறு வாய்ப்பில்லை.
திடீர் ஆலோசனை
இருப்பினும் பாஜகவுக்கு நெருக்கடி தர வேறு வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து சிவசேனா மூத்த தலைவர்கள் அனில் தேசாய், சுபாஷ் தேதாஸ் உள்ளிட்டோர், தலைவர் உத்தவ் தாக்ரே தலைமையில் கட்சி அலுவலகத்தில் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பாஜகவுக்கு சிவசேனா ஆதரவு அளிக்குமாறு இல்லை மறுக்குமா என்பது 12ம்தேதி தெரியும்.
காங்கிரஸ் குழு தலைவர் யார்?
இதனிடையே மகாராஷ்டிரா சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருக்க தேவையான உறுப்பினர் பலமும் காங்கிரசுக்கு கிடைக்கவில்லை என்பதால், சட்டசபையில் அதன் எம்.எல்.ஏ குழு தலைவராக ஒருவரை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இந்த கூட்டத்தை மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுனகார்கே மும்பையில் இன்று மதியம் 2 மணிக்கு நடத்த உள்ளார்.