குஜராத் டூ அஸ்ஸாம்...அடுத்து கோவா போகும் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள்- பாஜகவுடன் புதிய ஆட்சி?
குவஹாத்தி: மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் புயலை கிளப்பிவிட்டிருக்கும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கோவா மாநிலத்தில் முகாமிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திடீரென சிவசேனா கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சிவசேனா மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே 42 எம்.எல்.ஏக்களுடன் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். சட்டசபையில் சிவசேனாவுக்கு மொத்தம் 55 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் முதலில் பாஜக ஆளும் குஜராத் மாநிலம் சென்றனர். பின்னர் அங்கிருந்து பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான அஸ்ஸாம் சென்றார்.
இதனையடுத்து நேற்று அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர் உத்தவ் தாக்கரே. ஆனால் இதில் 8 சிவசேனா அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. அத்துடன் 13 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் பொதுமக்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, தாம் முதல்வர் பதவியில் இருந்து விலக தயார்; என்னுடைய ராஜினாமா கடிதம் ரெடியாகவே இருக்கிறது என்றார். பின்னர் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்தும் உத்தவ் தாக்கரே குடும்பத்துடன் வெளியேறினார். இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யமாட்டார் என்றார் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்.
இந்த பின்னணியில் அஸ்ஸாமில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 42 எம்.எல்.ஏக்களும் பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான கோவா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் சிவசேனா சட்டசபை தலைவராக அவர் தேர்வு செய்யப்படக் கூடும். இதனடிப்படையில் ஆளுநரை சந்தித்து தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை ஏக்நாத் ஷிண்டே வழங்குவார். சட்டசபையில் தங்களையே ஒரிஜனல் சிவசேனாவாக அங்கீகரிக்கவும் அவர் வலியுறுத்துவார்.
இப்படியான ஒரு நெருக்கடி அதிகரிக்கும் நிலையில் வேறுவழியே இல்லாமல் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார்; அப்போது ஏக்நாத் ஷிண்டே அணியுடன் இணைந்து பாஜக புதிய அரசு அமையும்.
சட்டசபையில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்; ஏக்நாத் ஷிண்டே அணியில் 42 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மகாராஷ்டிராவில் தற்போதைய நிலையில் ஆட்சி அமைக்க 144 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. இதனால் பாஜக-சிவசேனா (ஏக்நாத்) இணைந்து புதிய ஆட்சி அமையக் கூடிய சாத்தியம் உள்ளது.