வடமாநிலங்களில் கடும்குளிர்: பனிச்சரிவில் சிக்கி 2 இளம்பெண்கள் பலி
ஜம்மு காஷ்மீர் : வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வரும் நிலையில், காஷ்மீரில் தண்ணீர் எடுக்க சென்ற இரண்டு இளம் பெண்கள் பனிச்சரிவில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
வடக்கு காஷ்மீரில் உள்ள பண்டிபுரா மாவட்ட குரேஸ் பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் ஷபீகா பானு(18) மற்றும் தில்ஷதா பானு (16). இவர்கள் இன்று அருகிலுள்ள கிஷன்கங்கா ஆற்றில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளனர்.
அப்பகுதியில் கடும்பனி நிலவுகிறது. இந்நிலையில், அப்பெண்கள் கிஷன்கங்கா ஆற்றில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மலையின் மேல் பகுதியில் படிந்திருந்த பனிக்கட்டிகள் சரியத்தொடங்கியுள்ளன. நடக்க இருக்கும் அசம்பாவிதத்தை உணர்ந்து அவர்கள் சுதாரிப்பதற்கு முன்னதாக பனி அவர்களை மூடியது. பனிச்சரிவில் சிக்கிய அவர்கள் பனியில் புதைந்து பரிதாபமாக பலியானார்கள்.
தண்ணீர் எடுக்க சென்ற இளம்பெண்கள், மாலை வரை வீடு திரும்பாததால், அவர்கள் குடும்பத்தார் அளித்த தகவலின் பேரில் அவர்களை மீட்பு குழுவினர் தேட ஆரம்பித்தனர். தீவிர தேடுதலுக்கு பின்னர் அவர்களில் தில்ஷதா பானுவின் சடலம் மீட்கப்பட்டது, ஷபீகா பானுவின் சடலம் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரமாக அப்பகுதியில் கடும் பனிப்பொழிவு இருந்து வருவதால், அப்பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளனர்.