இந்தியாவின் மதிப்பை சிதைக்க சிலர் முயற்சி...அரசியல் கட்சிகள் காரணம்...மோடி தாக்கு
திஷ்பூர் : இந்தியாவின் மதிப்பை சிதைக்க வெளியில் இருந்து சிலர் முயற்சி செய்கிறார்கள். இதற்கு பின்னால் அரசியல் கட்சிகள் உள்ளன என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.
அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி இன்று சுற்றுபயணம் செய்தார். அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் அசோம் மாலா திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த திட்டம் அசாமின் சாலை உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
திட்டங்களை துவக்கி வைத்த பிறகு பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, சமீப நாட்களாக நாட்டிற்கு எதிராக சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன. நாட்டிற்கு வெளியில் இருந்து சிலர் இந்தியாவில் மதிப்பை சிதைக்க முயற்சிப்பதற்கான சில ஆவணங்கள் வெளியாகி உள்ளன. இதற்கு விளக்கம் சொல்ல முயற்சிக்கும் சில அரசியல் கட்சிகள் இதன் பின்னணியில் உள்ளன.
உதாரணமாக இந்திய டீ. இந்த சதித் திட்டத்திற்கு ஒவ்வொரு தேயிலை தோட்டம், ஒவ்வொரு தேயிலை தொழிலாளர்களுக்கும் அந்த அரசியல் கட்சிகள் பதில் சொல்ல வேண்டும் என்றார். முன்னதாக ட்விட்டரிலும் தனது அசாம் பயணம் குறித்து மோடி பதிவிட்டிருந்தார்.
மேலும் மோடி கூறுகையில், அசோம் மாலா, தேசிய பாரத்மாலா திட்டத்துடன் இணைக்கப்படும். இது 500 மாவட்டங்களை இணைக்கக் கூடியது. இதனால் நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்டத்தின் முக்கிய சாலைகள் இணைக்கப்படும். இந்த திட்டம் தனித்துவம் வாய்ந்தது என மோடி தெரிவித்தார்.