சோனியா உடல்நிலை குறித்த சர்ச்சை பேனர்.. ஆர்வக் கோளாறு' லக்னோ காங்கிரசாருக்கு நோட்டீஸ்!
லக்னோ: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்ததாக உத்தரப்பிரதேச மாநில லக்னோ காங்கிரசாருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான கட்சிகளில் குடும்பத்தினர் ஆதிக்கம் இருப்பது சகஜமாகிவிட்ட ஒன்றுதான். ஒரு அரசியல் குடும்பத்தில் பேரன் பேத்தியைக் கூட விட்டு வைக்காமல் வாழ்த்தி போஸ்டர் அடிப்பது தொண்டர்களின் வழக்கம்.
ஆனால் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் காங்கிரசார் கொஞ்சம் அதிகமாகவே மண்டையைப் போட்டு உடைத்து யோசித்துவிட்டனர் போல.. பிரியங்காவுக்காக அவர்கள் வைத்த பேனர் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
என்ன பேனர்?
லக்னோவில் காங்கிரஸார் வைத்துள்ள பேனரில், சோனியாவுக்கு உடல்நிலை சரியில்லை..ராகுலுக்கு பணிசுமை அதிகம்.. அதனால் பூல்புர் தொகுதியில் பிரியங்கா போட்டியிட்டு பிரசாரம் செய்ய வேண்டும் என்பதுதான் பேனர் வாசகம்.
சோனியா உடல்நிலை
சோனியா காந்தி 2011ஆம் ஆண்டு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின்னர் அவ்வப்போது அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்து வருகிறார்.
ராகுல் காந்தி
அதனாலேயே ராகுல் காந்தியை காங்கிரஸ் துணைத் தலைவராக்கி அவர் தலைமையில் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது காங்கிரஸ்.
பிரியங்கா
இந்த நிலையில் பிரியங்கா தலைமையிலேயே காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறது என்று தகவல்கள் பரவின.. ஆனால் காங்கிரஸ் இதை மறுத்தது. தற்போது ஜஹவர்லால் நேரு போட்டியிட்ட பூல்புர் தொகுதியில் பிரியங்கா போட்டியிட வலியுறுத்தி சர்ச்சைக்குரிய பேனர் வைத்திருக்கிறார்கள் காங்கிரசார்.
மாநில காங்கிரஸ் நோட்டீஸ்
பிரியங்காவை அழைக்கிறோம் என்ற பெயரில் சோனியாவின் உடல்நிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேனர் வைத்ததால் லக்னோ மாவட்ட காங்கிரசாருக்கு மாநில காங்கிரஸ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது.