அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டாம்... இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை?
டெல்லி: இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தை இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ் நேற்று சந்தித்தார். அந்தச் சந்திப்பின் போது, இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா தனது ஆதரவை அளிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொள்ளப் பட்டதாகத் தெரிகிறது.
வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற உள்ள மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, அமெரிக்கா மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் 2 முறை தீர்மானம் கொண்டு வந்தது. அதில்,இலங்கை அரசுக்கு தோல்வியே கிடைத்தது. இந்நிலையில், மீண்டும் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் வெற்றி பெற்றால், இலங்கை மீதான நிர்ப்பந்தம் அதிகரிக்கும். சர்வதேச விசாரணை நடத்த வாய்ப்பு ஏற்படக்கூடும்.
எனவே, அதனை முறியடிக்கும் வகையில், ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆதரவை திரட்ட இலங்கை முடிவு செய்துள்ளது. அதன்படி, மூன்று நாள் பயணமாக டெல்லி வ்ந்துள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் நேற்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்துப் பேசினார்.
மறுப்பு...
இந்தியா கேட் அருகே உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. ஆனால், டெல்லியில் இந்திய தரப்பினரை சந்தித்துப் பேசியதும் செய்தியாளர்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ள ஜி.எல். பெரீஸ் இம்முறை செய்தியாளர்களைச் சந்திக்க விரும்பவில்லை.
ரகசிய சந்திப்பு....
சல்மான் குர்ஷித்தை தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள ஐநா உறுப்பு நாடுகளின் தூதர்களை சந்தித்துப் பேசியதாக இலங்கைத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், அவர் எதற்காக அவர்களை சந்தித்துப் பேசினார் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
நல்லுறவு குறித்துப் பேச்சு...
இந்நிலையில், இந்தச் சந்திப்பு தொடர்பாக வெளியுறவு அமைச்சக உயரதிகாரி கூறியதாவது:-
இரு தரப்பு நல்லுறவு, அண்மையில் சென்னையில் நடைபெற்ற இந்திய-இலங்கை மீனவர்கள் சந்திப்பு, வடக்கு மாகாணத்தில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை தொடர்பாக இரு நாட்டு அமைச்சர்களும் பேசினர்.
ஒத்துழைப்புடன்....
சல்மான் குர்ஷித் பேசுகையில், தமிழக மீனவர்கள் உள்பட இந்திய மீனவர்களின் பாதுகாப்பில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. ஆகவே, அவர்கள் மீது எதிர்காலத்தில் தாக்குதல் நடத்தாமல் இலங்கை கடற்படை தவிர்ப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சல்மான் குர்ஷித் கேட்டுக் கொண்டார். இந்திய, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என இரு தலைவர்களும் பரஸ்பரம் வலியுறுத்தினர்.
இந்தியாவின் கூட்டாளி...
ஹரியாணா மாநிலத்தில் பிப்ரவரியில் நடைபெறவுள்ள "சூரஜ்குந்த் மேளா' நிகழ்வை இந்தியாவின் கூட்டாளியாக இலங்கை இணைந்து நடத்துவது குறித்தும் இரு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டனர்' என அவர் தெரிவித்தார்.
சந்திப்பின் பின்னணியில்...
ஆனால், பெரீஸின் டெல்லி வருகையின் நோக்கம், ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதற்காகத்தான் என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.