உடுப்பி கிருஷ்ணர் கோயில் நிர்வாகத்தை ஏற்ற பெஜாவர் மடம்! விழாவில் அத்வானி,சந்திரபாபு நாயுடு பங்கேற்பு
உடுப்பி: சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் கோயில் நிர்வாக பொறுப்பை 5வது முறையாக இன்று பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி ஏற்றுக்கொண்டார். மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், மத்திய அமைச்சர்கள் வெங்கய்யநாயுடு, உமாபாரதி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரபலங்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
உலக பிரசித்தி பெற்ற உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் கோயிலை நிர்வகித்து, பக்தர்களுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட நிர்வாக பொறுப்பு 2 வருடங்களுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறது. மொத்தம் 8 மடங்கள் இந்த நிர்வாகத்தை சுழற்சி முறையில் நடத்துகின்றன.
கடந்த 2 வருடங்களாக, காணியூர் மடாதிபதி வித்யா வல்லப சுவாமிஜி பொறுப்பில் இருந்த நிர்வாகம், இன்று பெஜாவர் மடத்தின் அதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகளிடம் வழங்கப்பட்டது. சுழற்சி முறையில், விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிஜி தற்போது 5வது முறையாக இந்த பொறுப்பை வகிக்கிறார்.
இந்த விழாவையொட்டி, இன்று அதிகாலை 1.30 மணி முதல் 5.30 மணிவரை உடுப்பி நகரமெங்கும் பெரும் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. பல்லக்கு ஊர்வலங்கள், அலங்கார வளைவுகள் என நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
காணியூர் மடாதிபதியிடமிருந்து (மத்துவாச்சாரியார் வழங்கியது) அக்ஷய பாத்திரத்தை விஸ்வேஸ்வர சுவாமிஜி வாங்கிக்கொண்டு முறைப்படி நிர்வாகத்தை பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வதற்காக, மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, சதானந்தகவுடா, உமா பாரதி, அனந்த்குமார் உள்ளிட்டோரும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பல பிரபலங்களும் உடுப்பி வந்திருந்தனர்.
தமிழக அமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் என குறிப்பிட்டு, அவரும் விழாவில் பங்கேற்க வருவதாக அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், பன்னீர்செல்வம் விழாவில் பங்கேற்க வரவில்லை.