3-ஆவது முறையாக திருப்பதிக்கு வந்த சிறிசேனா... நாளை காலை சுவாமி தரிசனம்
ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு வந்துள்ளார் இலங்கை அதிபர் சிறிசேனா.
திருப்பதி: ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக இன்று திருப்பதிக்கு இலங்கை அதிபர் சிறிசேனா வந்தடைந்தார்.
இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அதிபராக பதவியேற்ற பின்னர் மூன்றாவது முறையாக இன்று திருப்பதிக்கு சென்றுள்ளார். பாதுகாப்பு காரணமாக இலங்கையில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து கார் மூலமாக சித்தூர் வழியாக திருப்பதி வந்தடைந்துள்ளார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் மாவட்ட போலீஸாரும் வரவேற்றனர்.
அதிபர் வந்த சில நிமிடத்தில் ஆளில்லா பறக்கும் கேமரா அங்கு பறந்ததால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பக்தர்களும் வியாபாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து போலீசார் விசாரணை செய்ததில் வனத்துறை சார்பில் தோட்டத்துறையை மேம்படுத்துவதற்காக இந்த ஆளில்லாத கேமரா மூலம் புகைப்படம் எடுத்ததாக தகவல் வெளிவந்தது.
நாளை காலை சுவாமி தரிசனம் செய்யவுள்ள அவரை ரங்கநாயகர் மண்டபத்தில் அமர வைத்து, ஏழுமலையானின் பிரசாதம், 2018-ஆம் ஆண்டின் நாள்காட்டி மற்றும் கையேடு, ஏழுமலையானின் திருஉருவப்படத்தை தேவஸ்தான அதிகாரிகள் வழங்குகிறார்கள். அதன் பின்னர் அவர் இலங்கைக்கு செல்கிறார்.