சபாநாயகராகும் மகாராஷ்டிராவின் 4வது அரசியல் தலைவர் சுமித்ரா மகாஜன்
டெல்லி: லோக்சபாவின் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள சுமித்ரா மகாஜன், மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து அப்பதவிக்கு வரும் 4வது அரசியல் தலைவராவார்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் லோக்சபா தொகுதியில் சுமித்ரா மகாஜன் 8 முறை வெற்றி பெற்று எம்.பி.யாகத் தேர்வாகியுள்ளார். ஆனால் அவர் பிறந்தது மகாராஷ்டிரத்தின் கொங்கண் பகுதியிலுள்ள ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லுன் என்ற கிராமமாகும். திருமணத்துக்குப் பின்னர் மத்திய பிரதேச மாநிலத்தில் குடியேறினார்.
கணேஷ் வாசுதேவ் மவலாங்கர்
சுமித்ராவுக்கு முன் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கணேஷ் வாசுதேவ் மவலாங்கர், நாட்டின் முதலாவது லோக்சபாவின் சபாநாயகராக இருந்தார். 1952 ஆம் ஆண்டு மே 15-ந் தேதி முதல் 1956ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி அவரை அவர் சபாநாயகராக இருந்தார். குஜராத்தைச் சேர்ந்த அவர் பின்னாளில் மகாராஷ்டிராவின் கொங்கண் பகுதியில் குடியேறியவர்.
சிவராஜ் பாட்டீல்
அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் சிவராஜ் பாட்டீல் 1991ஆம் ஆண்டு ஜூலை 10-ந் தேதி முதல் 1996ஆம் ஆண்டு மே 22-ந் தேதி வரை சபாநாயகராக இருந்தார். இவர் மகாராஷ்டிராவின் லத்தூரைச் சேர்ந்தவர்.
மனோகர் ஜோஷி
சிவசேனா கட்சியின் மனோகர் ஜோஷி, 2002ஆம் ஆண்டு மே 10-ந் தேதி முதல் 2004ஆம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி வரை சபாநாயகராக இருந்தார். இவரும் கொங்கண் பகுதியைச் சேர்ந்தவரே.
சுமித்ரா மகாஜன்
தற்போது சுமித்ரா மகாஜன் மகாராஷ்டிராவின் 4வது அரசியல் தலைவராக சபாநாயகர் பதவி ஏற்றுள்ளார்.