சுனந்தா உடலில் காயங்கள்... மர்ம நோய் ‘லுபுஸ்’ காரணமா?: பரபரப்பு தகவல்
திருவனந்தபுரம்: கடந்த வெள்ளியன்று மரணமடைந்த மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா, லுபுஸ் என்ற நோயால் பாதிக்கப் பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சர் சசி தரூர், கேரளாவைச் சேர்ந்தவர். கடந்த மக்களவைத் தேர்தலில், திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து தான், அவர் தேர்வு செய்யப்பட்டார். இதனால், சசி தரூரும், சுனந்தாவும், அடிக்கடி கேரளாவுக்கு வருவது வழக்கம்.இப்படித் தான், இம்மாதம், 12ம் தேதி, இருவரும், திருவனந்தபுரத்துக்கு வந்திருந்தனர். அங்குள்ள, கேரள மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில், சுனந்தா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சுனந்தாவுக்கு, முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதற்காக, மருத்துவமனையில், மூன்று நாட்கள் தங்கி யிருந்த சுனந்தா பின், 14ம் தேதி, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த தகவல், மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், சுனந்தா தற்போது இறந்துள்ளதால், இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அந்த மருத்துவமனியைச் சேர்ந்த மருத்துவர் விஜயராகவன் கூறுகையில், ‘சுனந்தாவுக்கு, பரிசோதனை நடந்தது உண்மை தான். ஆனால், அந்த சோதனை முடிவுகளில், அவருக்கு எந்தவிதமான தீவிரமான நோயும் இருந்ததாக தெரியவில்லை. தற்போது, அனைவருமே, குறிப்பிட்ட கால இடைவெளிகளில், தங்களை பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர். அதுபோலவே, சுனந்தாவும், இங்கு வந்தார். அவருக்கு சில எளிய மருத்துகள் தரப்பட்டன. ஆனால், அந்த மருந்து குறித்தோ, அவரின் உடல் நிலை குறித்தோ, விரிவான விவரங்களை தெரிவிக்க முடியாது.
ஒரு வாரம் கழித்து, மீண்டும், திருவனந்தபுரம் வந்து, பரிசோதனை முடிவுகளை பெற்றுக் கொள்வதாக, சுனந்தா தெரிவித்திருந்தார். ஆனால், அதற்குள், அவர் இறந்து விட்டார். பரிசோதனை முடிவுகளை, சசி தரூருக்கும், போலீசாருக்கும் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், சுனந்தாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? எதற்காக, அவர் பரிசோதனை செய்தார்? பரிசோதனை முடிவுகளில் என்ன தெரியவந்தது? என்பது போன்ற விவரங்கள், வெளிப்படையாக தெரிவிக்கப்படாததால், அதுகுறித்த விஷயங்கள், தொடர்ந்து, மர்மமாகவே உள்ளன.
ஆனால், சுனந்தா லுபுஸ் என்ற நோயால் பாதிக்கப் பட்டிருந்தாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். நோய் எதிர்ப்புத் திறனைக் குறைக்கும் நோயான லுபுஸ் தாக்கினால், மரணம் என்பது நிச்சயம் என்று சொல்லப் படுகிறது.
சரியான குணமாக்கும் மருந்துகள் இல்லாத இந்நோய்க்கு வலி நிவாரணி மட்டுமே தற்காலிகத் தீர்வு எனக் கூறப் படுகிறது. இந்நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்கள் உடலில் தானாகவே காயங்கள் உண்டாகும் எனவும், சுனந்தா உடலில் காணப்படும் காயங்களுக்கும் அவை கூட காரணமாகஇருக்கலாம் எனவும் மருத்துவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.