பத்மநாபசுவாமி கோவில் வழக்கு- கோபால் சுப்பிரமணியத்துக்கு உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
டெல்லி: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் வழக்கில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தை ஆலோசகராக நீடிக்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக கோபால் சுப்பிரமணியத்தை நியமிக்க நீதிபதிகள் நியமன குழு பரிந்துரைத்தது. ஆனால் மத்திய அரசு ஆட்சேபனை தெரிவித்ததால், அவர் நீதிபதி நியமன பட்டியலில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்.
மேலும் தலைமை நீதிபதி லோதா, பதவியில் இருக்கும் வரை உச்சநீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் என்றும் அறிவித்தார். அத்துடன் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் தொடர்பான வழக்கில் நீதிமன்ற ஆலோசகர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாகவும் உச்சநீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்தார்.
இவ்வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.தாக்குர், ஏ.ஆர்.தவே ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. பக்தர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஆலோசகராக நீடிக்க கோபால் சுப்பிரமணியத்தை கேட்டுக்கொள்ளுமாறு வற்புறுத்தினார்.
அதை ஏற்ற நீதிபதிகள், கோபால் சுப்பிரமணியத்தின் மனுவை நிறுத்தி வைத்தனர். இவ்வழக்குக்காக ஏராளமான நேரத்தை கோபால் செலவிட்டு இருப்பதால், அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து, ஆலோசகராக நீடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.