அந்தப் பக்கம் ஷாருக்கைத் திட்ட வேண்டியது.. இந்தப் பக்கம் "ஐஸ்" வைப்பது.. "சுமோ" சொல்வதைக் கேளுங்க!
பாட்னா: ஷாருக் கானை பாகிஸ்தானி என்றும், ஐஎஸ்ஐ ஏஜென்ட் என்றும் வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டிருக்கிறது பாஜகவில் ஒரு கூட்டம். மறுபக்கம் ஷாருக்கின் தேசபக்தியை யாரும் சந்தேகப்படக் கூடாது என்றும் அதே பாஜகவிலிருந்து குரல் கொடுக்கிறார்கள் சிலர்.
பீகார் தேர்தல் சமயத்தில் ஷாருக்கை சரமாரியாக சில பாஜக தலைவரா்கள் திட்டியதால் தேர்தலில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் பாஜகவுக்கு வந்து விட்டது.
இதையடுத்து பாஜகவிலிருந்து சிலர் ஷாருக் கானை ஆதரித்துப் பேச ஆரம்பித்துள்ளனர். ஷாருக்கின் தேசபக்தியை யாரும் சந்தேகிக்கக் கூடாது என்று பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும், வருங்கால முதல்வர் என பாஜகவினரால் வர்ணிக்கப்படுபவரமான சுஷில் மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை நமோ என்று அழைப்பதைப் போல இவரை சுமோ என்று பீகார் பாஜகவினர் அழைக்கிறார்கள்.
இந்த சுமோ ஷாருக் கான் குறித்துக் கூறியுள்ளதைக் கேளுங்கள்...
நான் ரசிகன்
நான் ஷாருக்கானின் ரசிகன். அவர் மாபெரும் நடிகர். யாரும் அவரது தேசபக்தியை கேள்வி கேட்கக் கூடாது. ஷாருக் குறித்து பாஜகவினர் சிலர் கூறியதை நான் ஆதரிக்கவில்லை. ஷாருக் கான் குறித்த கருத்துக்கள் தேவையில்லாதவை என்றார் மோடி.
மொத்த ஓட்டும் கோவிந்தாவாகும் அபாயம்
மோடி அவசரம் அவுசரமாக ஷாருக் குறித்து இப்படிப் பேசியிருப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பீகாரில் ஷாருக் கானுக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. மத பாரபட்சம் இல்லாமல் அத்தனை சமுதாயத்திலும் ஷாருக் கான் மனம் கவர்ந்த ஹீரோவாக வலம் வருகிறார்.
முஸ்லீம் ஓட்டுக்கள் அதிகம்
அதை விட முக்கியமாக கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் சுபால், அராரியா, கிருஷ்ணகன்ச், கத்தியார், பூர்னியா, தர்பங்கா, மதுபானி ஆகிய மாவட்டங்களில் முஸ்லீம்கள் அதிகம். எனவேதான் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்து நான் ஷாருக்கின் ரசிகன் என்று பேசியுள்ளார் சுமோ என்று தெரிகிறது.
2 பேரின் திமிர்ப் பேச்சு
முதலில் பாஜகவின் மகாராஷ்டிர எம்.எல்.ஏவான கைலாஷ் விஜயவர்கியா ஷாருக்கானை விமர்சித்துப் பேசியிருந்தார். அடுத்து பாஜக எம்.பியான ஆதித்யநாத் ஷாருக்கை கடுமையாக விமர்சித்திருந்தார். அவரது பேச்சு பாகிஸ்தானின் ஹபீஸ் சயீத் பேசுவது போலவே உள்ளது என்று அவர் கடுமையாக சாடியிருந்தார்.
முஸ்லீம் என்பதற்காக விமர்சிப்பதா?
இந்த நிலையில் சிவசேனா கட்சி எம்.பி சஞ்சய் ராத் கூறுகையில், ஷாருக் கான் ஒரு முஸ்லீம் என்பதற்காக அவரை விமர்சிப்பதை ஏற்க முடியாது. இந்த நாடு சகிப்புத்தன்மைக்குப் பெயர் போனது. முஸ்லீம்களும் சகிப்புத்தன்மைக்குப் பெயர் போனவர்கள். ஷாருக்கானை குறி வைத்து தாக்குவதை ஏற்க முடியாது.
இதில் பாகிஸ்தான் ஏன் வருகிறது?
பாகிஸ்தானையும், ஷாருக்கையும் ஏன் தொடர்புப்படுத்திப் பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை. இது கண்டனத்துக்குரியது. ஷாருக் கான் ஒரு சூப்பர் ஸ்டார். இந்திய மக்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றவர் அவர். மதத்தைப் பார்க்காத இந்திய மக்களால்தான் ஷாருக்கான் இன்று சூப்பர் ஸ்டாராக இருக்க முடிகிறது. அதுதான் இந்தியா என்றார் அவர்.
மனைவி இந்துவாக இருந்தாலும்
இப்படி பாஜகவினரால் கடுமையாக விமர்சிக்கப்படும் ஷாருக்கானின் தந்தை ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார். ஷாருக்கானின் மனைவி கெளரி இந்து ஆவார். மத பாரபட்சம் பார்க்காமல் பழகும் தன்மை கொண்டவர் ஷாருக் கான். மொழி, இனம், சமுதாயம் என அத்தனை விஷயங்களையும் தாண்டி நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருப்பவர் ஷாருக். அவரைப் பற்றி இழிவாக இப்படிப் பேசுவது புதிதல்ல.. இதனால் அவரும் கூட இதையெல்லாம் கேட்டு மனம் வெதும்பிப் போவதில்லை. சிரித்தபடி அவரது வேலையைப் பார்க்கச் சென்று விடுகிறார்.
ஆனால் இன்னும் எத்தனை காலம்தான் ஒரு முஸ்லீம் என்பதற்காக ஷாருக்கானை குறி வைத்துக் குதறி எடுக்கப் போகிறார்கள் இந்தக் கா(லி)விகள்??