இலங்கை அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்த்து மழையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வரஜ்!!
டெல்லி: நாட்டின் முதலாவது வெளியுறவுத் துறை அமைச்சராக சுஷ்மா ஸ்வராஸ் நியமிக்கப்பட்டுள்ளதை இலங்கை அரசியல் கட்சிகள் அனைத்தும் வரவேற்றுள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுஷ்மா ஸ்வராஜூக்கு வெளியுறவுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இலங்கை அரசுடன் நெருக்கமான உறவு கொண்டவர் என்ற விமர்சனமும் சுஷ்மா ஸ்வராஜ் மீது இருக்கிறது.
இந்நிலையில் சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவுத் துறை அமைச்சரானதற்கு இலங்கை அரசியல் கட்சிகள் அனைத்தும் வரவேற்றுள்ளன.
இலங்கை அமைச்சர் நியூமால் பெரேரா கூறுகையில், சுஷ்மா சுவராஜ் அனைத்து கட்சி உறுப்பினர்களுடன் 2012ம் ஆண்டு இலங்கை வந்தபோது உரையாடினேன். அவரிடம் சர்வதேச உறவுகள் குறித்து பரந்த அறிவு உள்ளது. அதனாலேயே அவர் வெளியுறவுத் துறையில் சிறப்பாக செயற்படுவார். அவரது திறமையால் தென்னாசியாவே பெருமைப்படும் என்றார்.
அதேபோல் இலங்கை தமிழர் பிரச்சனையை சுஷ்மா ஸ்வராஜ் திறமையாக கையாள்வார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சுஷ்மா ஸ்வராஜின் நியமனம் நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
சுஷ்மா சுவராஜின் நியமனத்தின் மூலம் இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு இலங்கை இனப்பிரச்சினைக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என்பது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. ஆர்.யோகராஜனின் கருத்து.
இலங்கை பயணத்தின் போது சுஷ்மா சுவராஜ், இலங்கை தலைவர்களுடன் நல்ல தொடர்பை பேணியதாக ஜாதிக ஹெல உறுமய எம்.பி. அத்துரலியே ரத்தின தேரர் கூறியுள்ளார்.