அன்னை தெரசாவுக்கு "புனிதர்' பட்டமளிப்பு விழா: சுஷ்மா தலைமையில் வாடிகன் போகும் இந்தியக் குழு
டெல்லி: வாடிகன் நகரில் அன்னை தெரசாவுக்கு 'புனிதர்' பட்டம் அளிக்கும் விழாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்தியக் குழுவினர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாசிடோனியா குடியரசு நாட்டில் பிறந்த அன்னை தெரசா இந்தியாவில் குடியேறி, மதத் தொண்டுடன் மனித சமூகத்துக்கும் தொண்டாற்றினார். கொல்கத்தாவில் அவர் உருவாக்கிய அமைப்பு சார்பில் தொழுநோயாளிகள் உள்பட பலருக்கும் சிகிச்சையும் உதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1997இல் காலமான அன்னை தெரசாவுக்கு, மறைவுக்குப் பின், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மறைந்த அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. அந்த சிபாரிசு பற்றி புனிதர் பட்டத்துக்கு ஒப்புதல் வழங்கும் வாடிகன் குழு ஆலோசனை நடத்தியது.
அன்னை தெரசா
அன்னை தெரசா உள்பட 5 பேர் பெயர், புனிதர் பட்டத்துக்கான பரிசீலனை செய்யப்பட்டது. இதையடுத்து, அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்க போப் ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து தெரசாவை புனிதர் பட்டத்துக்குத் தேர்வு செய்திருப்பதாக உலகெங்கும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமைப் பீடமான வாடிகன் கடந்த மார்ச் மாதம் அறிவித்தது.
புனிதர் பட்டம் விழா
இத்தாலியின் வாடிகன் நகரில் வரும் செப்டம்பர் 4ஆம்தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அன்னை தெரசாவை "புனிதர்' என்று போப் ஃபிரான்சிஸ் அறிவிக்க உள்ளார். இவ்விழாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்தியாவில் இருந்து செல்லும் குழுவினர் பங்கேற்பார்கள் என தெரியவந்துள்ளது.
இந்தியக்குழுவினர் பங்கேற்பு
இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அன்னை தெரசா, புனிதர் என்று அறிவிக்கப்படுவதற்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படையில், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா தலைமையில் இந்தியக் குழுவினர் வாடிகன் செல்கின்றனர். அக்குழுவில் இடம்பெறும் பிரதிநிதிகள் யார் என்பது இறுதி செய்யப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
கெஜ்ரிவால் - மம்தா பானர்ஜி
தெரசாவின் தொண்டு நிறுவனம் விடுத்த அழைப்பை ஏற்று, புனிதர் பட்டத்துக்கான விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் கெஜ்ரிவால், வாடிகன் செல்ல உள்ளதாக டெல்லி மாநில அரசு அதிகாரி கூறியுள்ளார். அவருடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் வாடிகன் செல்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தொண்டு நிறுவனத்தில் சேவை
கெஜ்ரிவால் அரசியலில் ஈடுபடுவதற்கு முன் இந்திய வருவாய்ச் சேவை அதிகாரியாகப் பணியாற்றினார். அதற்கு முன், அவர் கொல்கத்தாவில் உள்ள தெரசாவின் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.