மீண்டும் முதல்வராக இப்போது ஜெயலலிதாவுக்கு உரிமை கிடைத்துள்ளது - சாமி சொல்கிறார்!
டெல்லி: ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரையும் விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு எனக்கு அதிர்ச்சி தருகிறது. இருப்பினும் இதை எதிர்த்து நானாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர மாட்டேன் என்று சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.
அதேசமயம், கர்நாடக அரசுத் தரப்பில் அப்பீல் செய்தால் அவர்களுக்கு தான் உதவி செய்வேன் என்று சாமி தெரிவித்துள்ளார். மேலும் எந்த முடிவெடுப்பதாக இருந்தாலும் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு யோசிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து சாமி கருத்து தெரிவிக்கையில், இந்த தீர்ப்பு அதிர்ச்சி தருகிறது. இருப்பினும் ஜெயலலிதாவை எதிர்த்து நான் உச்சநீதிமன்றம் போகப் போவதில்லை. அதேசமயம், கர்நாடக அரசுத் தரப்பில் அப்பீல் செய்தால் அவர்களுக்கு முழு உதவியாக இருப்பேன்.
தீர்ப்பு முழுவிவரம் குறித்து எனக்குத் தெரியவில்லை. தீர்ப்பை முழுமையாக படிப்பேன். அதற்குப் பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன். எந்த முடிவாக இருந்தாலும் அது ஆகஸ்ட்டுக்குப் பிறகே இருக்கும் என்றும் சாமி கூறியுள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பை முதலில் வெளிக் கொணர்ந்தவர் சாமிதான். பின்னர் இந்த வழக்கில் ஆரம்பம் முதலே அவர் அரசுத் தரப்பு உதவி செய்தும் வந்தார். இந்த சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் மனுதாரரே சாமிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சாமி வெளியிட்டுள்ள இன்னொரு டிவிட்டில், இந்தத் தீர்ப்பின் மூலம் மீண்டும் முதல்வர் பதவியை வகிக்க ஜெயலலிதாவுக்கு உரிமை கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.