பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 812 ஆக உயர்வு
டெல்லி: நாடுமுழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளோரின் எண்ணிக்கை 812 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
வெளிநாடுகளில் பரவி வந்த பன்றிக் காய்ச்சல் தற்போது, இந்தியா முழுவதும் கோரத்தாண்டவமாடி வருகிறது.
கடந்த ஜனவரி முதல் பன்றிக்காய்ச்சலுக்கு 13000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், காஷ்மீர், மேற்கு வங்கம், உத்தரகாண்ட், ஒடிசா மாநில மக்கள் பன்றிக் காய்ச்சலால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
பன்றிக்காய்ச்சல் நோய்க்கு நேற்று ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதிலும் 38 பேர் பலியானதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் 212
ராஜஸ்தானில் இந்த நோய்க்கு 4318 பேர் பாதிக்கப்பட்டும், 212 பேர் பலியாகியும் இருக்கிறார்கள். குஜராத்தில் 202 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகராஷ்டிரா, உ.பி
மகாராஷ்டிராவில் இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் 521 பேர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 99. உத்தரபிரதேசத்தில் 250 பேர் பாதிக்கப்பட்டும், 9 பேர் பலியாகியும் இருக்கின்றனர். காஷ்மீரில் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 5 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் 63. 4 பேர் பலியாகியுள்ளனர். 14 பேர் நோய் தாக்குதலுக்கு உள்ளான உத்தரகாண்ட் மாநிலத்தில் 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.. ஒடிசாவில் நோய் பாதிப்பு 11, உயிரிழப்பு 3 ஆகும்.

812 பேர் பலி
ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 7 பேரும், உத்தரகாண்டில் 3 பேரும், காஷ்மீரில் ஒருவரும் நேற்று உயிரிழந்தனர். இதனால் 2 நாட்களுக்கு முன்பு 774 ஆக இருந்த பன்றிக் காய்ச்சலால் பலி எண்ணிக்கை 812 ஆக அதிகரித்தது.

தமிழக நிலவரம்
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் பலியாகும் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்நோய் தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, விருதுநகர், ராஜபாளையம், மதுரையில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

டாமி புளு மாத்திரைகள்
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பை தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பன்றிக் காய்ச்சலைத் தடுக்க தனியார் மருத்துவமனை களுக்கும் டாமி புளு மாத்திரைகள் வழங்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications