ஜெயலலிதா எதிர்த்த உதய் திட்டத்தில் இணைந்தது தமிழகம்.. கையெழுத்திட்டார் அமைச்சர் தங்கமணி
ஜெயலலிதா எதிர்த்த மத்திய அரசின் உதய் எனப்படும் மின் சீரமைப்பு திட்டத்தில் தமிழகம் இன்று இணைந்தது. தமிழக அரசு முறைப்படி சேர்வதற்கான ஒப்பந்தம் டெல்லியில் இன்று கையெழுத்தானது.
டெல்லி: மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழகம் இன்று இணைந்தது. தமிழக அரசு முறைப்படி சேர்வதற்கான ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது.
மத்திய அரசின் உதய் திட்டத்தில் முதலாவதாக ஜார்க்கண்ட் மாநிலம் சேர்ந்தது. இதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களும் திட்டத்தில் சேர்ந்தன.
கடந்த ஆகஸ்ட் மாதம் புதுச்சேரி மாநிலம் உதய் திட்டத்தில் இணைந்தது. தொடக்கத்தில் உதய் திட்டத்துக்கு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து கடந்த ஜூலை மாதம் மத்திய மின் துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இதன் தொடர்ச்சியாக உதய் திட்டம் தொடர்பான சந்தேகங்களை களைய மத்திய, மாநில அரசுகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உதய் திட்டத்தில் இன்று கையெழுத்திட்டார். இதன்மூலம் உதய் திட்டத்தில் 21வது மாநிலமாக தமிழகம் இணைந்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், 3 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இதேபோல் நிதி பத்திரத்துக்கான முதிர்வு காலம் 15 ஆண்டாக இருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்றுள்ளது.
மேலும் மின்சார உற்பத்திக்கான செலவை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 5,200 கோடி ரூபாய் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்ததன் மூலம் 11000 கோடி ரூபாய் பயன் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.