வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமாவின் விசா காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்த மத்திய அரசு
டெல்லி: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் விசாவை மேலும் ஓராண்டு நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கடந்த 1994ம் ஆண்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அவருக்கு இந்திய அரசு ஓராண்டு விசா வழங்கியது. இந்நிலையில் அந்த விசா காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்துள்ளது உள்துறை அமைச்சகம். தஸ்லிமா கேட்டுக் கொண்டதன்பேரில் அவரது விசா காலத்தை நீட்டிக்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பரிந்துரை செய்தார்.

இது குறித்து தஸ்லிமா கூறுகையில்,
எனது விசா காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இது குறித்து இந்திய அரசு இதுவரை எனக்கு தகவல் அளிக்கவில்லை என்றார்.
ஸ்வீடன் நாட்டு குடிமகளான தஸ்லிமாவுக்கு கடந்த 2004ம் ஆண்டில் இருந்து இந்தியா தொடர்ச்சியாக விசா வழங்கி வருகிறது. அவர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் தங்கியுள்ளார். இந்தியாவில் அதிலும் குறிப்பாக கொல்கத்தாவில் நிரந்தரமாக தங்கிவிட ஆசையாக உள்ளது என்று தஸ்லிமா பலமுறை தெரிவித்துள்ளார்.
தஸ்லிமா கொல்கத்தாவில் தங்கியிருந்தபோது அவரது படைப்புகளை எதிர்த்து 2007ம் ஆண்டு முஸ்லீம்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அவர் கொல்கத்தாவை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications