ஜனாதிபதி தேர்தல்: யாரை நிறுத்தினாலும் பாஜகவுக்கே அதிமுக (எடப்பாடி) ஆதரவு- மோடியிடம் தங்கமணி உறுதி
ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக எடப்பாடி கோஷ்டி ஆதரவு அளிக்க உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடியிடம் அமைச்சர் தங்கமணி இதைத் தெரிவித்திருக்கிறார்.
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கே தங்களது அணி ஆதரவு தரும் என பிரதமர் மோடியிடம் எடப்பாடி கோஷ்டியைச் சேர்ந்த அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார்.
டெல்லியைப் பொறுத்தவரை அதிமுகவின் ஓபிஎஸ் அணியை முழுமையாக ஆதரிக்கிறது. எடப்பாடி கோஷ்டிக்கு எதிராக செயல்படுகிறது எனக் கூறப்பட்டு வருகிறது.
எடப்பாடி புறக்கணிப்பு
எடப்பாடி கோஷ்டி அமைச்சர்களுக்கும் டெல்லி குறி வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் முகம் கொடுத்து கூட பிரதமர் மோடி பேசவில்லை எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில்தான் எடப்பாடி கோஷ்டியைச் சேர்ந்த அமைச்சர் தங்கமணி டெல்லியில் பிரதமர் மோடியை தனியே சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்பு 25 நிமிட நேரம் நீடித்தது.
ஓபிஎஸ் அணி ஷாக்
மின்துறை அமைச்சர்கள் மாநாட்டுக்குப் போன இடத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. ஓபிஎஸ் அணியோ எதற்காக தங்கமணியைச் சந்தித்தார் மோடி என மண்டையை பிய்த்துக் கொண்டது.
ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு
இச்சந்திப்பின் போது, பிரதமர் மோடியிடம் எடப்பாடியின் எண்ண ஓட்டங்களை விவரித்திருக்கிறார் தங்கமணி. அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிக்கவும் தங்களது கோஷ்டி தயாராக இருக்கிறது எனவும் உறுதி அளித்திருக்கிறார் தங்கமணி.
மகிழ்ச்சி
தங்கமணி தெரிவித்த பல விஷயங்களை பொறுமையுடன் கேட்டுக் கொண்டாராம் மோடி. இத்தகவல்களை முதல்வர் எடப்பாடியிடம் 'மிக மிக' மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் தங்கமணி என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.