சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டின் என்.ஜி.ஓ.க்கு வெளிநாட்டு நிதி- சி.பி.ஐ. விசாரணை?
டெல்லி: சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டின் சப்ரங் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கூடும் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் செதல்வாட், 2002ஆம் ஆண்டு கோத்ரா கலவரங்களை வெளி உலகுக்கு அம்பலப்படுத்தியவர்களில் முக்கியமானவர். மத்தியில் பாரதிய ஜனதா அரசு பதவியேற்ற பின்னர் இந்தியாவில் செயல்படும் என்.ஜி.ஓ.க்களின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் டீஸ்டா செதல்வாட்டின் சப்ரங்க் கம்யூனிகேஷன்ஸ் பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் மத்திய அரசின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளது. வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட நிதி உதவியை இந்திய அரசுக்கு எதிரான பிரசாரத்துக்கு டீஸ்டாவின் சப்ரங் நிறுவனம் பயன்படுத்தியதாக உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டி விசாரணை நடத்தி வருகிறது. இது அப்பட்டமான சட்டவிரோதம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இது தொடர்பாக டீஸ்டாவின் சப்ரங் நிறுவனத்துக்கு உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே சில கேள்விகளை கேட்டு நோட்டீஸும் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக சப்ரங் நிறுவனத்துக்கு கிடைத்த வெளிநாட்டு நிதி உதவி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரைக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.