தெலங்கானா: ஆந்திர சட்டசபையில் அமளி… சீமாந்திராவில் முழு அடைப்பு
ஹைதராபாத்: தெலங்கானா தனி மாநில விவகாரத்தால், ஆந்திர சட்டசபையில் அமளி நிலவியது.
ஆந்திர சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. அவை கூடியதும், கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு தெலங்கானா பிரச்னை குறித்து விவாதிக்குமாறு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
இதனை சபாநாயகர் ஏற்க மறுத்ததால், அவரை முற்றுகையிட்ட உறுப்பினர்கள், ஆந்திர பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர்.
அதேநேரத்தில், தெலங்கானா மாநிலம் கோரி அப்பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து சட்டசபை நடவடிக்கைகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டதால், அவையை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
சீமாந்திரா பந்த்
இதனிடையே தெலங்கானா மசோதா மீது ஆந்திர சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியில் முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், வேலை நிமித்தமாக சென்னை, வேலூர் போன்ற ஊர்களுக்கு வந்து செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முழு அடைப்பில் பாரதிய ஜனதா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்க வில்லை.
தொடர் அமளி
கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதி தொடங்கிய ஆந்திர சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர், தெலங்கானா மசோதா தொடர்பாக ஏற்பட்ட தொடர் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது.
ஆந்திரா மறுசீமைப்பு மசோதா
இந்நிலையில், இன்று மீண்டும் ஆந்திர சட்டப் பேரவை கூடிய நிலையில், ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதா பற்றி விவாதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநில அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் அனைத்துக் கட்சிகள் சார்பில் சீமாந்திராவில் உள்ள 13 மாவட்டங்களிலும் ஒரு நாள் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சட்டசபையில் அமளி
இதனிடையே ஆந்திர சட்டசபையில் மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால், தெலங்கானா மாநிலம் தொடர்பான மத்திய அரசின் மசோதா மீது விவாதிக்க முடியாத நிலை உருவானது.
மத்திய அரசு அவகாசம்
தெலங்கானா மசோதா குறித்து கருத்து தெரிவிக்க ஆந்திர அரசுக்கு வரும் 23ஆம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.