நாடு முழுவதும் இனி அவசர அழைப்பிற்கு ''112''
டெல்லி: இந்தியா முழுவதற்குமான அவசர அழைப்பு எண்ணாக டிராய் பரிந்துரை செய்த 112 எண்ணை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனையடுத்து இந்த எண் விரைவில் நாடு முழுவதும் அறிமுகப் படுத்தப்பட உள்ளது.
நாடு முழுவதும் விரைவில் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் எண் 112ஐ அறிமுகம் செய்யலாம் என தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.
இந்தியாவில் தற்போது காவல்துறை உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு 108, மேலும் 101, 102 என பல்வேறு எண்கள் அவசர கால அழைப்புகளுக்காக செயல்பட்டு வருகிறது. ஆனால் அமெரிக்காவில் எந்த ஒரு அவசர அழைப்பாக இருந்தாலும் 911, இங்கிலாந்தில் 999 போன்ற எண்களை அவசர உதவிக்காக செயல்படுத்தி வருகின்றன.
ஒரே எண் கட்டாயம் வேண்டும்:
எனவே இந்தியாவிலும் தனித்தனியாக காவல், தீ அணைப்பு, மருத்துவம், விபத்து, அவசர கால உதவி போன்றவற்றிற்கு இருப்பதை மாற்றி ஒரே எண்ணாக அறிவிக்கலாம் என்று டிராய் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்காக 112 என்ற எண்ணை டிராய் பரிந்துரை செய்திருந்தது.
இரண்டாம் நிலை எண்கள்:
மேலும் நாடு முழுவதும் ஒரே அவசர கால அழைப்பு எண்ணாக 112ஐ கொண்டு வரலாம் என்றும் டிராய் தெரிவித்தது. மேலும் தற்போது பயன்பாட்டில் உள்ள அவசர கால உதவி எண்களை அப்படியே இரண்டாம் நிலை எண்களாக மாற்றி, அதன் மூலம் அழைத்தாலும் 112க்கு செல்வது போல மாற்றலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம்:
மேலும் செல்போனில் அழைப்பு வசதி நிறுத்தப்பட்டிருந்தாலும், வேறு வகையில் தடை செய்யப்பட்டிருந்தாலும், எந்த சூழலிலும் இந்த 112ஐ எண்ணை மட்டும் அழைக்கும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே டிராயின் பரிந்துரையை ஏற்று நாடு முழுவதும் விரைவில் அவசர கால உதவி அழைப்புக்கு எண் 112ஐ அழுத்தவும் என்ற அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
விழிப்புணர்வு அவசியம்:
மேலும், மற்ற இரண்டாம் நிலை எண்கள் ஒருவருடம் வரையில், 112 என்ற எண்ணிற்கே சென்றடையும். பொதுமக்களிடையே 112 எண் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்ட பின்னர் அவை நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைந்து நடவடிக்கை:
இதுமட்டுமின்றி, ஆபத்தில் தவிக்கும் அழைப்பாளர்களை விரைவாக சென்றடையும் வகையில் அவர்களின் அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை வைத்தே உதவி தேவைப்படும் நபர்கள் எந்த இடத்தில் இருந்து அழைக்கிறார்கள் என்பதை கண்டறிந்து விரைந்து செயலாற்றும் வகையில் அவசர உதவி மையங்களில் சில நவீன ஏற்பாடுகளை செய்யவும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முடிவெடுத்துள்ளது.