சென்னை அமெரிக்க தூதரகத்தை தாக்க தீவிரவாதிகள் வைத்த "கோட் நேம்".. "வெட்டிங் ஹால்"!
டெல்லி: சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை தாக்க தீவிரவாகதிகள் வெட்டிங் ஹால் என்ற கோட் நேம் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
மேலும் இந்தத் தாக்குதலை நடத்தவுள்ள தீவிரவாதிகளுக்கு சமையல்காரர்கள் அதாவது குக்ஸ் என்றும் செல்லப் பெயர் வைத்துள்ளனர் என்ற விவரமும் தெரிய வந்துள்ளது. இந்தத் தீவிரவாதிகள் மாலத்தீவிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்து சதிச் செயலை அரங்கேற்றவும் திட்டமிட்டிருந்தனர்.
இந்த தோல்வி அடைந்த சதிச் செயல் குறித்த விவரங்கள் 23 பக்கம் கொண்ட பூந்தமல்லி தடா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வைத்து இந்த சதிச் செயல் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் பாகிஸ்தான் உளவாளி ஜாகிர் உசேன் சிக்கிக் கொண்டதால் இந்த சதிச் செயல் தோல்வியில் முடிவடைந்தது. இலங்கையைச் சேர்ந்த ஜாகிர் உசேன், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் உதவியுடன், சென்னைக்குள் ஊடுறுவி தாக்குதல் திட்டம் தொடர்பாக உளவு பார்த்து தகவல்களையும் திரட்டிக் கொடுத்துள்ளார்.
இவருக்கு தற்போது பூந்தமல்லி தடா கோர்ட் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நவம்பர் 28ம் தேதி தீர்ப்பளித்தது.
ஜாகிர் உசேன் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த ஒரு குழு இலங்கை செல்லவுள்ளது. ஆனால் இது தொடர்பான அனுமதியைக் கொடுக்காமல் மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் தாமதம் செய்து வருவதாக ஒரு தகவல் கூறுகிறது.
தீவிரவாதத் தாக்குதல்:
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐதான் இந்தச் சதித் திட்டங்களுக்குக் காரணகர்த்தா. தென்னிந்தியாவில் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட தீவிரவாதத் தாக்குதல்களை நடத்துவது அவர்களது திட்டம். இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் மூலம் உளவு பார்த்துத் தகவல் திரட்டியுள்ளது ஐஎஸ்ஐ.
கைது செய்யப்பட்ட ஜாகிர் உசேன் கோர்ட் விசாரணையின்போது தான் உளவு பார்த்ததை ஒத்துக் கொண்டார். மேலும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்காகவே இலங்கையின் உதவியுடன் தான் உளவு பார்த்ததாகவும் அவர் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தில் இலங்கைக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் அமீர் ஜுபைர் சித்திக்கி சொல்லித்தான் தான் அனைத்தையும் செய்ததாகவும் அவர் ஒப்புக் கொண்டார். ஜாகிர் உசேன் கைதானதைத் தொடர்ந்து அமீர் உடனடியாக பாகிஸ்தானுக்கு திருப்பி வரவழைக்கப்பட்டு விட்டார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த வழக்கில் தற்போது சித்திக்கின் பெயரையும் தேசிய புலனாய்வு ஏஜென்சி சேர்த்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கியத் தகவல்கள்:
தனது வாக்குமூலத்தில் பல முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளார் ஜாகிர் உசேன். அதில், இலங்கையில் உள்ள பல முக்கிய பாகிஸ்தான் அதிகாரிகளை தான் சந்தித்துப் பேசியது குறித்து விரிவாக விளக்கியுள்ளார்.
மேலும், பாங்காக்கில் வைத்து இரண்டு தற்கொலைப் படை தீவிரவாதிகளைச் சந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார். சித்திக்கை விட உயர்ந்த பொறுப்பில் இருந்த ஒரு பாகிஸ்தான் அதிகாரி, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தைத் தாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கு வெட்டிங் ஹால் என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் ஜாகிர் உசேனிடம் கூறியுள்ளார். இந்த தாக்குதல்களை நடத்தவிருக்கும் தீவிரவாதிகளுக்கு குக்ஸ் என்றும் பெயர் வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் வெடிகுண்டுகளுக்கு ஸ்பைஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
பாங்காக்கில் ஜாகிர் உசேன் சந்தித்த அந்த இரண்டு தற்கொலைப்படைத் தீவிரவாதிகள்தான் சென்னையில் தாக்குதல் நடத்த நியமிக்கப்பட்டவர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் நீக்குகப் போக்குக் காணப்படுவதாகவும், அதை அவசரமாக சரி செய்ய வேண்டியது அவசியம் என்றும், தேசிய புலனாய்வு அமைப்புக் குழு உடனடியாக இலங்கை செல்வது முக்கியமானது என்றும் விசாரணைத் தரப்பு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications