46 நர்சுகளை மீட்டதன் பின்னணியில் 'இந்திய ஜேம்ஸ்பாண்ட்'
டெல்லி: கேரள நர்சுகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதன் பின்னணியில், இந்திய 'ஜேம்ஸ் பாண்ட் 007' செயல்பட்டுள்ளது இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாஜகவினர், சுஷ்மாவையும், காங்கிரஸ்காரர்கள் உம்மன் சாண்டியையும் இந்த வெற்றிக்காக தலையில் தூக்கி வைத்து கொண்டாடலாம். ஆனால் உண்மையான ஆட்ட நாயகனோ எதுவும் நடக்காததுபோல காலையில் வாக்கிங் சென்றுவிட்டு, மாலையில் குடும்பத்தோடு அமர்ந்து உணவு சாப்பிட்டுவிட்டு தனது அடுத்த மிஷனை யோசித்தபடி அமைதியாக உள்ளார்.
பதைபதைத்த இந்தியர்கள்
ஈராக்கின் திக்ரித் நகரின் மருத்துவமனையொன்றில் பணியாற்றிய தூத்துக்குடி நர்ஸ் மோனிஷா உட்பட 46 இந்திய நர்சுகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியிருந்தனர். குடும்ப கஷ்டத்தை போக்க, கடல் கடந்து, கலாச்சாரம், மொழி என அனைத்திலும் மாறுபட்ட ஒரு தேசத்தில் இன்னல்பட்டுக் கொண்டிருந்த அந்த ஜீவன்கள், தீவிரவாதிகள் கையில் சிக்கியதை கேள்விப்பட்டதும், தாய்நாட்டிலுள்ளோரின் மனது நொறுங்கிப்போனது என்னவோ உண்மை.
கிணற்றில் போட்ட கல்
நர்சுகள் பத்திரமாக தாயகம் திரும்ப வேண்டும் என்று நினைக்காத ஆளில்லை. இந்திய அரசிடமும், மாநில அரசுகளிடமும், நர்சுகளின் குடும்பத்தார் நடையாய் நடந்து முறையிட்டுவந்தனர். ஆனால் கிணற்றில் போட்ட கல் போல, எந்த சலனத்தையும் மத்திய அரசு காண்பித்துக்கொள்ளவில்லை. ஆனால், யாருக்கும் தெரியாமல் அங்கு பல காய்நகர்த்தல்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன.
காரணம் இதுதான்..
இந்திய விமானப்படை விமானத்தை கொண்டு தீவிரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தலாமா, பேச்சுவார்த்தை நடத்தலாமா என்பது போன்ற பல யோசனைகள் மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்டுவந்தன. ஆனால் யோசித்து முடிக்கும்போதெல்லாம், எதுவுமே சரிபட்டு வராது என்று தோன்றியது. ஒரு முடிவுக்கும் வர முடியாததற்கு காரணம், டெல்லியின் பூட்டிய ஏசி அறைகளுக்குள் உட்கார்ந்து கொண்டு ஈராக் நிலவரத்தை யோசிக்க முற்பட்டதுதான் என்பதை அரசுக்கு நெத்திப்பொட்டில் அடித்து சொன்னார், அந்த 'ஜேம்ஸ்பாண்ட்'.
பிரதமர் பச்சைக் கொடி
"ஈராக்கிற்கு நான் செல்கிறேன், அங்குள்ள நிலைமையை நேரில் பார்த்து, யாரை பிடிக்க வேண்டுமோ அவர்களை பிடித்து காரியத்தை முடிக்கிறேன்" என்று அந்த ஜேம்ஸ்பாண்ட் சொன்ன கம்பீர தோரணை, இந்திய பிரதமருக்கும், வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் ஏதோ ஒரு நம்பிக்கையை கொடுத்ததை மறுக்க முடியாது. அப்படி உறுதியளித்த, அந்த, முன்னாள் உளவுத்துறை இயக்குனரை, நாடாளுமன்ற வட்டாரத்தில் செல்லமாக ஜேம்ஸ்பாண்ட் என்று அழைப்பார்கள். உலக நாடுகளின் அனைத்து தகவல்களும் அவரது சட்டைப்பையில் இருக்கும் என்பதால், பச்சைக்கொடி காண்பித்தார் பிரதமர்.
ஈராக், சவுதிக்கு இரு குழு
ஜூன் 25. ஒரு வெப்பமான காலை நேரத்தில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில், கால்வைத்தார் ஜேம்ஸ் பாண்ட். அவரது அறிவுறுத்தலின்பேரில், இந்திய உளவுத்துறையின் இயக்குநர் ஆசிப் இப்ராஹிம், சவுதி தலைநகர் ரியாத்துக்கு அதே நாளில் சென்றார். இவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமாக அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பேசிவந்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.
இவர்தான் அந்த ஜேம்ஸ் பாண்ட்
ஈராக்கில் ஜேம்ஸ் பாண்டும், சவுதியில் ஆசிப் இப்ராஹிமும், சன்னி இஸ்லாமிய பிரிவினர், சதாம் உசேன் ஆதரவாளர்களிடம் ஆலோசனைகளை நடத்தி நர்சுகள் மீட்பை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தினர். இதன் விளைவு இனிப்பாக இருந்தது. நர்சுகள் 46 பேரும் பத்திரமாக தாயகம் திரும்பினர். கடந்த சனிக்கிழமை நர்சுகள், கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியதை வாயில் சிகரெட்டுடன் டி.வி.சேனல்களில் நேரடியாக பார்த்துக் கொண்டு ஒன்றும் தெரியாதவர் போல இருந்த அந்த ஜேம்ஸ்பாண்ட் வேறு யாருமல்ல, இந்திய உளவுத்துறையின் முன்னாள் இயக்குநரும், தற்போதைய பிரதமரின், தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான அஜித் தோவல்தான் அது.
பாகிஸ்தான் கண்ணில் விரல் விட்டவர்
1968ம் ஆண்டின் கேரள பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோதிலும், அஜித் தோவல் அம்மாநிலத்தில் பணியாற்றியது கிடையாது. உளவுத்துறை இயக்குநராக இருந்தபோது பாகிஸ்தான் நாட்டுக்குள்ளேயே ஊடுருவி ஜேம்ஸ்பாண்ட் வேலைகளை செய்து அந்த நாட்டின் அணு ஆயுத ரகசியங்களை தாய்நாட்டுக்கு அளித்தவர்தான் இந்த அஜித்தோவல். இவரை பார்த்தாலே பாகிஸ்தான் ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் தொடை நடுங்கும். ஓய்வு பெற்று வீட்டில் இருந்தவரை, தேடிப்பிடித்து, தேசிய ஆலோசகராக்கி இசெட் பிளஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் வைத்திருப்பது, பிரதமர் மோடி.
புகழுக்காக அடிதடி..
உண்மை இப்படி இருக்க, காங்கிரசார் உம்மன் சாண்டியையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் லால் சாண்டியையும், பாஜகவினர் சுஷ்மாவையும் புகழ்ந்து கொண்டுள்ளனர். சுப்பிரமணிய சுவாமியோ, அரபு நாட்டிலுள்ள கேரள தொழிலதிபர் ஒருவர்தான் இதற்கு காரணம் என்று கண்டுபிடித்துள்ளார். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத, இந்திய ஜேம்ஸ்பாண்ட் தனது அடுத்தகட்ட நடவடிக்கைக்கான ஆயத்த பணிகளில் கருமமே கண்ணாக உள்ளார்.