மதசார்பற்றதன்மை இல்லாமல் இந்தியாவே கிடையாது: சோனியா காந்தி தாக்கு
டெல்லி: மதசார்பற்றதன்மை இல்லாமல் இந்தியாவே இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மறைமுகமாக பாஜகவை தாக்கி பேசினார்.
நாட்டின் முதலாவது பிரதமர் நேருவின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் 2 நாள் சர்வதேச மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க பாஜக கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளுக்கும் 54 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி அமைந்த பிறகு நேரு பிறந்தநாள் விழாக் குழு மாற்றி அமைக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட நேரு குடும்பத்தைச் சேர்ந்த எவருமே இடம்பெறவில்லை. இதன் காரணமாக நேரு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதில் மத்திய அரசுக்கும் காங்கிரஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு போட்டியாக காங்கிரஸ் சார்பில் 2 நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்றும், இன்றும் நடைபெற்றுவரும் இம் மாநாட்டில் பாஜக கூட்டணியில் இடம்பெறாத அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜக தலைமைக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்த மாநாட்டில் சோனியா காந்தி பேசியதாவது: மதசார்பற்றதன்மை இன்றி இந்தியா கிடையாது. இந்தியா போன்ற பல கலாச்சாரங்கள் கொண்ட ஒரு நாட்டில் மதசார்பற்ற தன்மை என்பது மிகவும் அவசியம். மதசார்பற்றதன்மை மீது நேரு மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். மதசார்பற்ற தன்மைக்கு ஆபத்து ஏற்படுமானால் தனது இறுதி மூச்சு போகும் வரை போராடுவேன் என்று நேரு முன்பு ஒருமுறை கூறியுள்ளார். நேரு குறித்த வரலாறு, சமீபமாக மறைக்கப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக அவர் குறித்த எதிர்மறை கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.
நவீன இந்தியாவை உருவாக்குவதில் நேரு சிற்பியாக செயல்பட்டார். பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி அதை வலிமையடையச் செய்தது நேருதான். நேருவின் உழைப்பால்தான் நாம் இப்போது பலனை அனுபவித்து வருகிறோம். அறிவார்ந்த ஒரு சமூகத்தையும், சமூக அக்கறையும் கொண்ட மனிதர்களாக இந்தியர்களை மாற்றியதில் நேருவின் பங்களிப்பு அதிகம். இவ்வாறு சோனியாகாந்தி பேசினார்.