என்.டி.ஆர் மகன் குடும்பத்திற்கு சோதனை மேல் சோதனை.. ஒரே மாவட்டத்தில் 10 வருடத்திற்குள் 3வது விபத்து
Recommended Video
ஹைதராபாத்: என்.டி.ஆர் மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா, கார் விபத்தில் நேற்று பலியானார். நல்கொண்டா மாவட்டத்தில் விபத்து நடந்துள்ளது. இந்த மாவட்டத்தில், இவர் குடும்பத்தார் விபத்தில் சிக்குவது இது மூன்றாவது முறை. இருமுறை உயிர்கள் பறிபோயுள்ளன. ஒருமுறை படுகாய சம்பவம் நிகழ்ந்தது.
பிரபல நடிகரும், ஹரிகிருஷ்ணா மகனுமான ஜூனியர் என்டிஆர், 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் தேதி, இதே நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கினார். சூர்யாபேட் அருகே ஜூனியர் என்டிஆர் பயணித்த எஸ்யூவி வகை கார் பல்டியடித்தது. இதில் ஜூனியர் என்டிஆரின் முதுகு தண்டுவடத்தில் சிறு காயங்கள் ஏற்பட்டன. தலை மற்றும் கைகளிலும் அடிபட்டது. கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு குணமடைந்தார்.
2014ம் ஆண்டு, டிசம்பர் 6ம் தேதி, ஹரிகிருஷ்ணாவின் மற்றொரு மகன் ஜானகிராம், பயணித்த டாடா சபாரி கார், ஹைதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் சென்றபோது, நல்கொண்டா மாவட்டத்திற்குள், தவறான திசையில் எதிரே வந்த டிராக்டர் மீது மோதியது. இதில் ஜானகிராம் பலியானார்.
இந்த நிலையில், நல்கொண்டா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை கார், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், அதை ஓட்டிச் சென்ற ஹரிகிருஷ்ணன் உயிரிழந்தார். ஹைதராபாத்திலிருந்து, நெல்லூர் நோக்கி சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. இம்மாவட்டம் முன்பு ஆந்திராவில் இருந்தது. தற்போது அது தெலுங்கானா மாநிலமாகும்.
மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும்கூட, அந்த மாவட்டத்திற்கும், என்டிஆர் குடும்பத்திற்கும் ஏனோ ராசியின்மை தொடருவதாக கூறப்படுகிறது.