அட உண்மைதானுங்க.. மழை வருமா என்பதை ரமணனைவிட சரியாக கணிக்கும் கோயில் கூரை!
கான்பூர்: உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் அருகே கடம்பூர் எனும் பகுதியில் உள்ள ஜெகன்நாதர் என்ற விஷ்ணு கோயிலின் மேற்கூரையில் தெரியும் நீர் துளியை கொண்டு மழை பெய்யுமா இல்லையா என்பதை நூறாண்டுகளாக மக்கள் கண்டுபிடித்து வருகிறார்கள்.
அசோக மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயில் நாட்டின் பல்வேறு கட்டிட அம்சங்களையும் ஒருங்கே பெற்றுள்ளது. இந்த கோயில் 'மழைக் கோயில்' என அழைக்கப்படுகிறது.
பருவமழை தொடங்கும் காலத்திற்கு முன்பு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளாக மக்கள் இக்கோயிலுக்கு படையெடுத்து வருகிறார்கள். பூஜைகள் செய்த பிறகு மேற்கூரையை பார்க்கிறார்கள்.
மேற் கூரையில் நீர் துளிகள் தென்பட ஆரம்பிக்குமாம். நீர் துளியின் அளவு பெரிதாக இருந்தால் நல்ல பருவமழை பொழியும் எனவும் நீர் துளி சிறிதாக இருந்தால் மழை குறைந்து வறட்சி நிலவும் என அப்பகுதி விவசாயிகள் நம்பிக்கையாக கொண்டுள்ளனர்.
கோயில் காணப்படும் நீர் துளி போலதான் பல ஆண்டுகளாக வானிலையும் நிலவி வருகிறதாம்.
இது தொடர்பாக பல்வேறு ஆய்வுக் குழுக்களும், விஞ்ஞானிகளும் இந்த கோயிலை பார்வையிட்டுள்ளனர். ஆனாலும், இந்த அதிசயத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஜெகன்நாதருக்கு தேரிழுத்து பூஜை செய்து வழிபடுவார்கள். ஜென்மாஷ்டமியின் போது சிறப்பு வழிபாடுகள், திருவிழாக்கள் நடைபெறும் என கோயில் பூஜாரி சுக்லா தெரிவித்தார். ஏழு தலைமுறைகளாக இவரது குடும்பம்தான் கோயிலில் பூஜை, கைங்கரியங்களை மேற்கொண்டு வருகிறது.
வானிலை இலாகாவாலேயே கணிக்க முடியாத மழை அளவை, கோயில் மேற்கூரையை பார்த்து அறிந்து கொள்வதால் அப்பகுதி விவசாயிகள் மழைக்கு ஏற்ற பயிர்களை விதைத்து பலன்பெற்று வருகிறார்கள்.