"சம்பூர்" அனல் மின்நிலையத்துக்காக 9 ஆண்டுகளாக தாய்நிலத்தில் அகதிகளாக வாழும் "ஈழத் தமிழர்கள்"!!
டெல்லி: இலங்கையின் திருகோணமலை சம்பூரில் இந்தியா அமைக்கும் அனல்மின் நிலைய திட்டத்தைக் காரணம் காட்டி கடந்த 9 ஆண்டுகளாக அப்பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் தாய்நிலத்திலேயே இன்னமும் அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து வருகிற கொடுமை நீடித்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு டெல்லி வந்திருந்தார் அதிபர் ராஜபக்சே. அவர் இலங்கை திரும்பிய உடனேயே இலங்கையின் கிழக்கில் திருகோணமலை சம்பூரில் இந்தியா அமைத்து தர இருக்கும் அனல்மின் நிலைய திட்ட பணிகளை விரைவுபடுத்த ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த சம்பூர் அனல்மின் நிலையத் திட்டத்தைக் காரணம் காட்டி 9 ஆண்டுகாலமாக இப்பகுதியில் வசித்த ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் அகதிகள் முகாம்களிலேயே இன்னமும் வசித்து வருகின்றனர். அவர்களது எதிர்காலம் என்னவென்று கேள்விக்குறியாகவே இருக்கிறது.
2006-ல் அகதிகளானவர்கள்..
இலங்கையில் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் முடிந்து 5 ஆண்டுகளைக் கடந்தாயிற்று. ஆனால் அதற்கு முன்னதாக யுத்தம் தொடங்கிய 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதன் முதலாக அகதிகளாக வெளியேறியவர்கள் திருகோணமலை சம்பூர்வாழ் தமிழர்கள்தான்.
சம்பூர் ஆன்மீக தலமும் கல்வி பூமியும்கூட
சம்பூரில் மிகவும் பிரசித்திபெற்ற சம்பூர் பத்திரகாளி கோவில், பல கல்வியாளர்களையும், சமூகசேவையாளர்களையும் உருவாக்கிய சம்பூர் மகாவித்தியாலயம், சம்பூர் ஸ்ரீமுருகன் வித்தியாலயம் ஆகிய கல்வி நிறுவனங்களுடன் இந்து சமய வரலாற்று ஆதாரங்களுடன் கூடிய இடம்தான் இந்த சம்பூர். இப்போது சம்பூர் பொட்டல்காட்டு பிரதேசமாக முற்று முழுதாக இலங்கை ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது.
உயர் பாதுகாப்பு வலயம்
சம்பூரைவிட்டு தமிழர்கள் வெளியேறிய பின்னர் அந்த பகுதியை உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியது இலங்கை ராணுவம். அப்பகுதியில்தான் இந்தியா உதவியுடனான அனல்மின் நிலையம் அமைக்கப்படவும் இருக்கிறது. இந்த காரணங்களால்தான் பிறபகுதி தமிழர்கள் சொந்த நிலத்தில் குடியேறிய பின்னரும் கூட சம்பூர் தமிழர்கள் அகதிகள் முகாம்களிலே வெயிலிலும் மழை வெள்ளத்திலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்திய எம்.பி.க்களுக்கு அனுமதி மறுப்பு
இந்த மக்களுக்கு நட்ட ஈட்டுத் தொகையோ, மாற்று வாழ்விடமோ எதுவுமே இதுவரை வழங்கப்படவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை சென்ற இந்திய எம்.பி.க்கள் குழுவினர் இந்த அகதிகள் முகாமைப் பார்வையிடவும் அனுமதிக்கப்படவில்லை.
9 ஆண்டுகால அகதி வாழ்க்கை
ஏறத்தாழ 9 ஆண்டுகளாக அகதிகள் முகாம்கள் வாழும் இந்த தமிழ் மக்கள் இனி சொந்த நிலத்தில் குடியேற்றப்படுவது சாத்தியமற்ற ஒன்று என்று இலங்கை அரசு திட்டவட்டமாக கூறுகிறது.
கைவிட்ட ஐ.நா.
இந்த சம்பூர் அகதிகளைப் பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பு உட்பட எந்த ஒரு சர்வதேசமும் கண்டு கொள்ளவே இல்லை. இப்படியான நிலையில் இந்த மக்களுக்கான தீர்வு தான் என்ன?
வீடு கட்டி வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் தருமா இந்தியா?
இலங்கையின் வடபகுதியில் ஈழத் தமிழர் மறுவாழ்வுக்காக வீடுகளைக் கட்டித்தருகிறது இந்திய அரசு. அதே நேரத்தில் தாம் அமைக்கும் அனல்மின் நிலையத் திட்டத்துக்காக சொந்த மண்ணை விட்டு அகதிகள் முகாம்களில் அவதியுறும் பல்லாயிரம் குடும்பங்களுக்கென கிழக்கில் வீடு கட்டித் தந்து அவர்களது வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் தரக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் இந்தியாவே உருவாக்கித் தருவதுதான் முதன்மையான தேவை என்கின்றனர் இலங்கை ஊடகவியலாளர்கள்.
செய்யுமா புதிய மோடி அரசு?