சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி- லட்சக்கணக்கானோர் தரிசனம்!
பம்பை: சபரிமலையில் மகர ஜோதியை பல லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் நேற்று கண்டு சரண கோஷங்கள் அதிர தரிசனம் செய்தனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் மிகவும் முக்கியமானது. இக் காலங்களில் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிந்து இருமுடிதாங்கி சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசித்து செல்வது வழக்கம்.
2013-14-ம் ஆண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி திறக்கப்பட்டது. 41 நாள் சிறப்பு பூஜைக்கு பின்னர் மண்டல பூஜை கடந்த மாதம் 26-ந்தேதி சன்னிதானத்தில் நடைபெற்றது.
30-ந் தேதி மீண்டும் நடை திறப்பு
பின்னர் சபரிமலை நடை அடைக்கப்பட்டு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி நடை திறக்கப்பட்டது.
திருவாபரணங்கள்
மகரவிளக்கு தினத்தில் அய்யப்பனுக்கு அணிவிப்பதற்காக திருவாபரணங்கள் ஞாயிறன்று பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி
பின்னர் திருவாபரணங்கள் நேற்று அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்த தீபாராதனை முடிந்து சில நிமிடங்களில், பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரம் காட்சி தந்தது. தொடர்ந்து, மகரஜோதி மூன்று முறை காட்சி தந்தது.
சாமியே சரணம் அய்யப்பா..
மகரஜோதி தரிசனத்தை லட்சகணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். அங்கு தரிசனத்திற்காக கூடியிருந்த பக்தர்கள் சாமியே... சரணம் அய்யப்பா... என மகர ஜோதியை தரிசனம் செய்தனர்.
பிற இடங்களில் இருந்தும்
சன்னிதானம் மட்டுமின்றி பண்டித்தாவளம், நீலிமலை உச்சி, மரக்கூட்டம், சபரி பீடம், அப்பச்சி மேடு ஆகிய இடங்களில் இருந்து மகர ஜோதியை காண வசதி செய்யப்பட்டு இருந்தது. மகர ஜோதியை முன்னிட்டு பம்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.