டிக்கெட் பரிசோதகர் அட்டகாசம்: ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை தள்ளி விட்ட கொடூரம்
மால்டா: மேற்குவங்க மாநிலத்தில், டிக்கெட் பரிசோதகர் ஒருவர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்ததற்காக ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் மால்டா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இன்டர்சிட்டி ரயிலில் வகிபூல் பீபீ (வயது35) என்ற பெண்மணி தனது மகளுடன் பயணம் செய்தார். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் அவர்கள் பயணம் செய்வதாக கூறி அபராத கட்டணமாக ரூ.550ஐ கட்டும்படி கூறி இருக்கிறார்.
அவ்வளவு பணம் இல்லாததால் அபராதக் கட்டணமாக ரூ.150ஐ மட்டும் செலுத்துவதாக அந்த பெண் டிக்கெட் பரிசோதகரிடம் கூறி இருக்கிறார். ஆனால் பேசிக்கொண்டிருக்கும் போதே சற்றும் எதிர்பாராத நிலையில், டிக்கெட் பரிசோதகர் அந்த பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் அந்த பெண்ணுக்கு முகம் மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பெண்ணை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிய டிக்கெட் பரிசோதகரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், ஏக் லக்கி என்ற ரயில் நிலையத்தை சூறையாடினர். இதனால், ரயில் போக்குவரத்து சுமார் ஒருமணி நேரம் பாதிக்கப்பட்டது.