ராவத் போய் ராவத் வந்தார்.. உத்தரகாண்ட் புதிய முதல்வராக தீரத்சிங் ராவத் நியமனம்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத்சிங் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் முதல்வரை மாற்றி இருக்கிறது பாஜக.
2017-ம் ஆண்டு உத்தரகாண்ட் சட்டசபையின் 69 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக 57 இடங்களைக் கைப்பற்றி அசுர பலத்துடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சியால் 11 இடங்களில்தான் வெல்ல முடிந்தது.
தேர்தலில் வென்ற பாஜக திரிவேந்திர சிங் ராவத்தை முதல்வராக்கியது. ஆனால் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தின் செயல்பாடுகளில் பாஜகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர். இது தொடர்பாக டெல்லி மேலிடத்துக்கு அடுத்தடுத்து புகார்கள் சென்றன.
திரிவேந்திர சிங் ராவத்தை முதல்வராக வைத்துக் கொண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொண்டால் பாஜக தோல்வியைத் தழுவும் என அச்சப்பட்டது பாஜக. இதையடுத்து டெல்லியில் இருந்து பாஜக பொறுப்பாளர்கள் டேராடூன் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையிலும் முதல்வரை மாற்றித்தான் ஆக வேண்டும் என பாஜக நிர்வாகிகள் அடம்பிடித்தனர். இதனால் திரிவேந்திரசிங் ராவத்தை பதவி விலக வேண்டும் என்று பாஜக தலைவர் ஜேபி நட்டா உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து இன்று டேராடூனில் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தீரத்சிங் ராவத், புதிய முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வராக தேர்வு செய்யப்பட்ட தீரத்சிங் ராவத் தற்போது லோக்சபா எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.