மே.வங்கத்தில் மீண்டும் மமதா ஆட்சி... டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று ஏபிபி நியூஸ்- நீல்சன் நடத்திய கருத்து கணிப்பும், பெங்காலி நியூஸ் சேனல் 24 Ghanta மற்றும் ஜிஎப்கே இணைந்து நடத்திய கருத்து கணிப்பும் கூறியிருந்த நிலையில், 3-ஆவதாக நேற்று இரவு வெளியான டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் கருத்து கணிப்பும் மமதாவே மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார் என்று கூறியுள்ளது.
294 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபைக்கு ஏப்ரல் 4 முதல் மே 5-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் இடதுசாரிகள் + காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இத்தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸே அதிக இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏபிபி நியூஸ்- நீல்சன் நடத்திய கருத்து கணிப்பில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 197, இடதுசாரிகள் 74, காங்கிரஸ் 16 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பெங்காலி நியூஸ் சேனல் 24 Ghanta மற்றும் ஜிஎப்கே இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் 200 இடங்களைக் கைப்பற்றும் என்றும் இடதுசாரிகள்- காங்கிரஸ் 90 இடங்களில் வெல்லக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக ஒரு இடத்தில் வெல்லும் சாத்தியம் இருக்கிறதாக கூறியிருந்தது.
இந்நிலையில் டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன. அதில் திரிணாமுல் காங்கிரஸ் 40 சதவீத வாக்குகளையும், இடதுசாரிகள் 31 சதவீத ஓட்டுகளையும், பா.ஜ.க. 11 சதவீத வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் 160 தொகுதிகளை கைப்பற்றும். இடதுசாரிகள் 106 அல்லது அதற்கு சற்று அதிகமான தொகுதிகளிலும், காங்கிரஸ் 21 தொகுதிகளையும், பா.ஜ.க. 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக அந்த கருத்துக் கணிப்பு கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications