பத்ம விருதுகளில் சாமியார்கள், வெளிநாட்டவர் ஆதிக்கம் -தமிழகத்திற்கு நிறைய ஏமாற்றம்
டெல்லி: 2015ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளில் தமிழகத்திற்கு இந்த முறை நிறைய ஏமாற்றம் அடங்கியுள்ளது. மிகவும் பிரபலமானவர் என்றால் கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் பெயர் மட்டுமே உள்ளது. மற்றபடி எதிர்பார்த்தது போல சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயர் இடம் பெறவில்லை.
பாரத ரத்னாவுக்கு அடுத்த உயரிய சிவில் விருது பத்ம விருதுகளாகும். பத்மவிபூஷண், பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் இது வழங்கப்படுகிறது.
கலை, சமூக சேவை, பொது விவகாரம், அறிவியல் பொறியியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் குடியரசு தின விழாவன்று இந்த விருதுகள் அறிவிக்கப்படும். தனியாக விழா நடத்தி விருதுகள் வழங்கப்படும்.
104 பேருக்கு விருதுகள்
இந்த ஆண்டு மொத்தம் 104 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 9 பேருக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு பத்மபூஷணும், 75 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
17 பெண்கள்
104 பேரில் 17 பேர் பெண்கள் ஆவர். 17 பேர் வெளிநாட்டவர், என்ஆர்ஐ ஆவர். 4 பேருக்கு மறைவுக்குப் பிந்தையதாக விருது அளிக்கப்படுகிறது.
சாமியார்கள் -துறவிகள்
இந்த விருதுகளில் இந்த முறை சாமியார்கள், துறவிகள் சற்று அதிகம் காணப்படுகின்றனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெகத்குரு ரமணாந்தாச்சார்யா சுவாமி ராமபத்ராச்சார்யாவுக்கு பத்மவிபூஷண் வழங்கப்படுகிறது. சுவாமி சத்யமித்ரானந்த் கிரிக்கு பத்மபூஷணும், ஜெதக்குரு அம்ரதா சூர்யானந்த் மகாராஜுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பில் கேட்ஸ் - மனைவி மெலின்டா கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், அவரது மனைவி மெலின்டா கேட்ஸ் ஆகியோருக்கும் பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மங்கள்யான் திட்ட இயக்குநர் அருணன்
மங்கள்யான் திட்ட இயக்குநரான தமிழகத்தைச் சேர்ந்த அருணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கர்நாடக பிரிவிலிருந்து விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்திற்கு ஏமாற்றம்
இந்த முறை விருதுகளில் தமிழகத்திற்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பத்மவிபூஷண் விருது தரப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவரது பெயர் இடம் பெறவில்லை.
6 பேருக்கு மட்டுமே
தமிழகத்திலிருந்து 6 பேருக்கு மட்டுமே விருதுகள் கிடைத்துள்ளன. அதில் பத்மவிபூஷண் விருது பேராசிரியர் மாலூர் ராமசாமி சீனிவாசனுக்கு அறிவியல், பொறியியல் பிரிவில் கிடைத்துள்ளது. சிவில் சர்வீஸ் பிரிவில் என்.கோபாலசாமி, கலைப் பிரிவில் சுதா ரகுநாதன் ஆகியோருக்கு பத்மபூஷண் விருது கிடைத்துள்ளது. கன்யாகுமரி அவசரளாவுக்கு கலைப் பிரிவில் பத்மபூஷண் விருது கிடைத்துள்ளது. சிவில் சர்வீஸ் பிரிவில் பி.வி.ராஜாராமன் மற்றும் மறைந்த ஆர். வாசுதேவனுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. அருணன் கர்நாடகத்திலிருந்து விருது பெறுகிறார்.