அம்மா இருக்குமிடம்தான் கோவில்: சிறைவாசலில் தினமும் ஆஜராகும் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள்
பெங்களூர்: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சிறை முன்பு தினசரியும் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் ஆஜராகி வருவது வாடிக்கையாக உள்ளது.
தன்னைப் பார்க்க பெங்களூருக்கு யாரும் வர வேண்டாம் என, தமிழக அமைச்சர்கள், ஆளுங்கட்சியினருக்கு தடை விதிக்கப்பட்டது.
கர்நாடகா உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேரின் ஜாமின் மனுக்கள் தொடர்பான விசாரணை நடந்த நேரத்தில், அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.பி., -எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூர் வருவதை, ஜெயலலிதா விரும்பவில்லை. அதோடு சிறை வாசலிலும், உயர் நீதிமன்ற வளாகத்திலும் கட்சியினர் கூட்டம் போடுவதை நீதிபதிகள் ரசிக்க மாட்டார்கள் என்பதால், இந்த தடை விதிக்கப்பட்டதாம்.
முன்னாள் அமைச்சர்கள்
அந்த தடையையும் மீறி முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, செ.ம.வேலுச்சாமி, பச்சைமால் உள்ளிட்டசிலர் தினமும் அங்கு வந்து சென்றனர்.
மீண்டும் அனுமதி
இப்போது, ஜாமின் மனு விசாரணை, உச்ச நீதிமன்றத்திற்கு போய் விட்டது. இந்த நேரத்தில், பரப்பன அக்ரஹாரா சிறை வாசல், வெறிச்சோடி இருந்தால், ஜெயலலிதாவுக்கு ஆதரவு குறைந்து விட்டது என, கர்நாடக தலைவர்கள் கருத வாய்ப்பாகி விடும். அப்படியொரு எண்ணம் உருவாவதை தடுக்க, மீண்டும் கட்சியினருக்கு அனுமதி தரப்பட்டுள்ளதாம்.
நீக்கப்பட்ட தடை
ஆனால், கண்டபடி வந்து குவிவதை தவிர்ப்பதற்காக, தினமும், நான்கு அமைச்சர்களும், அவர்களது மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைவளாகம் முன் ஆஜராக வேண்டும் என, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சசிகலா உத்தரவு
சிறையில் இருந்து, சசிகலா கூறிய யோசனை படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர். தினமும் எந்தெந்த அமைச்சர்கள் பெங்களூரு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்யும் பொறுப்பு, உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் போட்டுத் தரும் பட்டியல்படி அமைச்சர்களும், மாவட்ட அ.தி.மு.க.,வினரும் செயல்பட வேண்டும் என்றும், சிறையில் இருந்து ஜெயலலிதா வெளியே வரும் நாள் வரை, இது தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு அமைச்சர்கள்
அதன்படி நேற்று, அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் ஆகியோர் பெங்களூரு சென்றனர். இந்த அமைச்சர்களின் மாவட்டங்களைச் சேர்ந்த, எம்.பி.,க் கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் செவ்வாய்கிழமையன்று சிறை வளாகம் முன் திரண்டிருந்தனர். அமைச்சர்கள் வந்தாலும் சிறையில் இருக்கும் ஜெயலலிதா,யாரையும் சந்திப்பதும் இல்லை; பேசுவதும் இல்லை. சசிகலா தான் முக்கியமானவர்களை மட்டும் சந்தித்து அனைத்து உத்தரவுகளையும பிறப்பித்து வருகிறாராம்.
சும்மா சும்மா வந்து
நேற்று, நான்கு அமைச்சர்கள் அவசர அவசரமாக பெங்களூரு சென்றனர். அவர்களது மாவட்டங்களான, திண்டுக்கல், தஞ்சாவூர், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த, அ.தி.மு.க., எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சியினரும், நேற்று, சிறை வாசலில் திரண்டனர். காலையில் இருந்து மாலை வரை காத்திருந்து விட்டு திரும்பினர்.
நாங்களும் வருவோம்ல
இவர்கள் மட்டுமல்லாது, ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்து பதவி பறிக்கப்பட்ட சில முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார், பச்சைமால், மாதவரம் மூர்த்தி, முனுசாமி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் சிறைவாசலே கதி என்று கிடக்கின்றனர்.
இதுதான் எங்க கோவில்
அம்மா வெளியே வரும் வரைக்கும் நாங்க யாரும் ஊருக்குத் திரும்பிப்போகக் கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கோம். அமைச்சர்கள் தங்கள் பணிகளைக் கவனிக்க வேண்டியிருப்பதால், அவர்கள் சென்னைக்குப் போவதும் பெங்களூரு வருவதுமாக இருக்கிறார்கள். எங்களுக்கு அம்மா இருக்கும் இடமே கோயில். அவங்களை இங்கே விட்டுட்டு நாங்க போகமாட்டோம் என்று கூறுவதோடு காலை முதல் மாலை வரை அங்கேயே அமர்ந்துவிட்டனர். ஜெயலலிதா வெளியே வந்ததும் எப்படியும் தங்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்பதுதான் இப்போது இவர்களின் ஒரே நம்பிக்கை.