ஒரே தண்டவாளத்தில் நேருக்குநேர் வந்த இரு ரயில்கள்: கொல்கத்தாவில் பெரும் விபத்து தவிர்ப்பு
கொல்கத்தா: கொல்கத்தாவில் நேற்று எதிர்பாராத விதமாக இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட போதும், ரயில் ஓட்டுநர்களின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கொல்கத்தா, சீல்டா ரயில் நிலையத்தின் 7-வது பிளாட்பாரத்தில் இருந்து நேற்று காலை 8.10 மணிக்கு புறப்பட்ட சீல்டா-லால்கோலா பயணிகள் ரயில், வெளியில் செல்வதற்கான சிக்னல் விழுவதற்குள் 8.17க்கு மெயின் தண்டவாளத்திற்குச் சென்றுவிட்டது. அப்போது, எதிர்பாராதவிதமாக போங்கான்-சீல்டா ரயில், அதே தண்டவாளத்தில் எதிரே வந்தது.
இதனைக் கவனித்த சீல்டா-லால்கோலா ரயில் டிரைவர், உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு ரயிலை உடனடியாக நிறுத்தினார். இரு ரயில்களும் மெதுவாக வந்ததால் உடனடியாக ரயிலை நிறுத்த முடிந்தது.
அதனைத் தொடர்ந்து, சில்டா-லால்கோலா ரயிலை பின்னோக்கி செலுத்தினார் அதன் டிரைவர். இதனால், மீண்டும் 7-வது பிளாட்பாரத்தில் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றது ரயில். அதன்பின்னர், எதிரில் வந்த போங்காந் சீல்டா ரயிலும் பாதுகாப்பாக அதன் பாதையில் வந்து சேர்ந்தது.
நேருக்கு நேர் மோதவிருந்த ரயில்கள் டிரைவர்களின் நிதானத்தால் பாதுகாப்பாக நின்றன. நடக்கவிருந்த பெரும் விபத்தும், உயிரிழப்புகளும் மயிரிழையில் தவிர்க்கப்பட்டதால், பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
எனினும், கவனக் குறைவாக ரயிலை இயக்கி விபத்தை ஏற்படுத்த முற்பட்டதாக சீல்டா-லால்கோலா ரயில் டிரைவர், உதவி டிரைவர் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பரபரப்புச் சம்பவங்களுக்குப் பிறகு, நிறுத்தப்பட்டிருந்த சீல்டா-லால்கோலா ரயில் மிகவும் தாமதமாக, அதாவது 9.32க்கு புதிய டிரைவர், உதவி டிரைவர் மற்றும் கார்டு ஆகியோருடன் புறப்பட்டு சென்றது.












Click it and Unblock the Notifications