பெங்களூரில் 207 உயர தேசிய கொடி கம்பம்... 24 மணி நேரமும் தேசியக்கொடி பறக்க அனுமதி
பெங்களூர்: 24 மணி நேரமும் தேசியக் கொடி பறக்கும் வகையில் இந்தியாவிலேயே மிகப்பெரிய 207 அடி உயரம் கொண்ட தேசிய கொடி கம்பம் பெங்களூரில் நிறுவப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் குடியரசுத் தினம் கொண்டாடப் பட உள்ளது. இந்நிலையில், இந்தியாவிலேயே மிகப்பெரிய தேசிய கொடி கம்பம் பெங்களூர் இந்திராகாந்தி பூங்காவில் உள்ள தேசிய ராணுவ நினைவு சின்னத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில், கவர்னர் பரத்வாஜ் கலந்து கொண்டு, பிரமாண்ட தேசிய கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார்.
உயரம்....
207 அடி உயரம் கொண்ட இந்த கம்பத்தில் உள்ள தேசிய கொடி 31 கிலோ எடை கொண்டது. 72 அடி நீளமும், 48 அடி அகலமும் உடையது.
சிறப்பு அச்சு....
இந்த பிரமாண்ட தேசிய கொடி ஒரு வகையான துணியால் மும்பையில் உருவாக்கப்பட்டது. அதில் உள்ள அசோக சக்கரத்துக்கு சிறப்பு அச்சு பயன்படுத்தப்பட்டு உள்ளது.
தியாகிகளின் நினைவாக....
விழாவில் கவர்னர் பேசியதாவது, ‘நாட்டில் ஒவ்வொருவருக்கும் உரிமை மற்றும் கடமைகளை நினைவுபடுத்துவதாக தேசிய கொடி உள்ளது. மேலும் நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள், இன்னுயிர் நீத்தவர்களின் அடையாள சின்னமாக உள்ளது. அமெரிக்காவில் தினந்தோறும் தேசிய கொடி பறக்க விடப்படுகிது. ஆனால், நமது நாட்டில் அவ்வாறு இல்லை. இங்கு மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைக்கப்பட்டு இருப்பது பெருமைக்குரிய விஷயம் ஆகும்' என்றார்.
பெருமைக்குரிய விஷயம்....
இதைத்தொடர்ந்து, நவீன் ஜிந்தால் எம்.பி. பேசுகையில், ‘ராணுவ நினைவு சின்னங்கள் அதிகளவில் உள்ள நாடு இந்தியா. 2004-ம் ஆண்டு ஜனவரி 2-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு, ‘தேசிய கொடி ஏற்றுவது குடிமக்களின் அடிப்படை உரிமை' என்று தீர்ப்பு கூறியது. அந்த வரலாற்று தீர்ப்பின் 10-ம் ஆண்டு விழாவன்று இந்த மிகப்பெரிய கொடி கம்பம் தொடங்கி வைக்கப்பட்டு இருப்பது நாட்டுக்கு பெருமை தரக்கூடிய விஷயம் ஆகும்' என்றார்.
24 மணி நேரமும்...
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, 100 அடி உயரம் வரையுள்ள கம்பத்தில் பறக்கும் தேசிய கொடியை இரவு நேரத்தில் கீழே இறக்குவது கடமை ஆகும். ஆனால், 100 அடிக்கு மேல் உயரமுள்ள கம்பத்தில் கொடியை கீழே இறக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உள்துறை அமைச்சக உத்தரவு ஒன்றில் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே இந்த தேசிய கொடி 24 மணி நேரமும் பறக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.