விலையை ஏற்றி அன்பை பொழிகிறார் மோடி.. சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு! விளாசிய திரிணாமுல் காங்கிரஸ்!
கொல்கத்தா: கடந்த ஓராண்டில் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.250 வரை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்தியாவில் வணிக பயன்பாடு, வீட்டு உபயோகம் என இரு வகையான சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வீட்டு உபயோகத்திற்கும், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வணிக பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஒவ்வொரு மாதமும், சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன.
அதிரடி... சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.135 குறைவு.. வணிகர்கள் மகிழ்ச்சி
சிலிண்டர் விலை உயர்வு
அண்மைக் காலமாக வணிகம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தன. இதனால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும். அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் வர்த்தக சிலிண்டர் விலை விலையில் மாற்றம் ஏற்படும் . அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.965.50 காசுகளாக இருந்தது.
எவ்வளவு உயர்வு?
அதேபோல் மே மாதம் சிலிண்டர் விலை தொடக்கத்தில் ரூ.50 உயர்த்தப்பட்டது. இதன் மூலம் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.1, 015.50க்கு விற்பனையாகி வந்தது. பிறகு அதே மாதத்தில் மீண்டும் ரூ.3 உயர்த்தப்பட்டு, 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ. 1,018.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஜூன் மாதத்தில் சிலிண்டர் விலை மாற்றமில்லாமல் இருந்து வந்தது.
ஓராண்டில் ரூ.250 உயர்வு
இந்நிலையில் நேற்று 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டு, ரூ. 1,068.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ரூ.50 உயர்ந்துள்ளது நடுத்தர மற்றும் சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் கடந்த ஓராண்டில் மட்டும் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.250 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திரிணாமுல் காங்கிரஸ் விமர்சனம்
அந்த வகையில், கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு திரிணாமுல் காங்கிரஸ் பிரதமர் மோடியை குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதன் மூலம் மீண்டும் மக்கள் மீதான தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியுள்ளார். பிரதமர் மோடி ஆட்சியில் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர் இதுபற்றி கவலைப்படுவதில்லை என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.