கோடிக்கணக்கில் டாய்லெட்டை கட்டும் பாஜக அரசு.. ஆனால் பயன்படுத்துவோர் எங்கே?
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் சுத்தமான இந்தியா திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கழிப்பறைகள் பயன்படுத்தப்படாமல் உரம் மற்றும் தானியங்களை சேமித்து வைக்கும் அறைகளாக மாறியுள்ளன.
பிரதமர் மோடி சுத்தமான இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். முன்னதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின்கீழ் 2 ஆண்டுகளில் இந்தியாவில் 1 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகளை கட்ட பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின்படி கழிப்பறை வேண்டும் என்று கேட்பவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட பல கழிப்பறைகள் தானியம் மற்றும் உரங்களை சேமித்து வைக்கும் அறைகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் வழக்கம் போன்று திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தி வருகிறார்கள்.
தற்போது பாஜக அரசு கட்டியுள்ள கழிப்பறைகள் பார்க்க நன்றாக இருந்தாலும் அவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. பலருக்கு திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் ஏற்படும் விபரீதங்கள் தெரியாததால் அவர்கள் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டும் அவற்றை பயன்படுத்தாமல் உள்ளனர்.
அரசு கொடுக்கும் அழுத்தத்தால் கிராமத்து பஞ்சாயத்து தலைவர்கள் கழிப்பறைகளை கட்டுவதில் காட்டும் வேகத்தை அதை பயன்படுத்துமாறு மக்களை வலியுறுத்துவதில் காட்டுவது இல்லை. கேட்டால் குறிப்பிட்ட நேரத்திற்குள் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் இது குறித்து மக்களிடையே விளக்கிக் கூற எங்களுக்கு நேரமில்லை என்கிறார்கள் பஞ்சாயத்து தலைவர்கள்.
சுத்தமான இந்தியா திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள சுமார் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான கழிப்பறைகளில் பல பயன்படுத்தப்படாமல் உள்ளது என்று கூறப்படுகிறது.