நாய்க்குட்டி குரைத்ததால் மிரண்ட யானைக்குட்டிகள்- தீயணைப்பு நிலையம் காலி!
சுத்தூர்: மைசூர் சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள யானைகள் பராமரிப்பு பகுதியில், நாய்குட்டி குரைத்ததால் மிரண்ட குட்டியானைகள் தீயணைப்பு நிலைய கதவு, ஜன்னல்களை உடைத்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மைசூர் சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள சுத்தூர் மடத்தில் யானைகள் மற்றும் யானை குட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அந்த மடத்தை சேர்ந்த பாகன்கள், நேற்று காலை 7 மணியளவில் 3 வயது 6 மாதங்கள் ஆன தோரணா, மற்றும் 3 வயதான சம்பா ஆகிய 2 யானை குட்டிகளை நடைபயிற்சிக்கு அழைத்து சென்றனர்.
வேறு பாதையில் நடைபயிற்சி:
வழக்கமாக, அந்த யானை குட்டிகள் சாமுண்டிபுரம், வித்யாரண்யபுரம் வழியாக தான் நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்படும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக நேற்று காலை சரஸ்வதிபுரம் வழியாக அந்த யானைகளை பாகன்கள் அழைத்து சென்றனர்.
நாய்குட்டி குரைத்ததால் மிரட்சி:
சரஸ்வதிபுரம் முக்கிய சாலையில் குட்டி யானைகள் சென்று கொண்டிருந்தபோது, அவற்றை பார்த்து ஒரு நாய் குட்டி குரைத்தது. இதனால், அந்த யானைகள் மிரண்டு போய் அங்கும், இங்கும் ஓடத்தொடங்கின.
வாகனங்களின் “ஹார்ன்”:
அதே நேரத்தில், அந்த வழியாக ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்கள் ஹார்ன் அடிக்க தொடங்கினார்கள்.
மிரண்டு ஓடிய யானைகள்:
இதனால் அந்த யானை குட்டிகள் மேலும் மிரண்டு ஓடின. ஒரு யானை தீயணைப்பு துறை அலுவலகத்துக்குள்ளும், இன்னொரு யானை சிறிது தொலைவில் உள்ள டி.டி.எல் கல்லூரி வளாகத்துக்குள்ளும் புகுந்து அட்டகாசம் செய்தது.
இரும்பு கதவு “அம்பேல்”:
தீயணைப்பு அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள், கதவுகள், டைல்ஸ் கற்களை ஒரு யானை நொறுக்க, இன்னொரு யானை டி.டி.எல். கல்லூரி வளாகத்தில் உள்ள இரும்பு கதவை உடைத்து துவம்சம் செய்தது.
போராடிய பாகன்கள்:
இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து யானைகளை கட்டுப்படுத்த பாகன்கள் கடுமையாக போராடினார்கள்.
மறைந்து கொண்ட யானைகள்:
ஆனாலும், அது பலிக்கவில்லை. மாறாக, அந்த குட்டி யானைகள் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்கிருந்த சுவருக்கு பின்னால் சென்று மறைந்து இருந்தன.
வனத்துறையினரால் மீட்பு:
இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த குட்டி யானைகளை பிடித்து, அவை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருந்தனர். பின்னர் அவற்றின் கால்களில் சங்கிலி போட்டு அங்கிருந்து அழைத்து சென்றனர்.