உத்தா பஞ்சாப் படத்தால் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பில்லை: மும்பை ஹைகோர்ட்
மும்பை: உத்தா பஞ்சாப் திரைப்படத்தில் இந்திய இறையாண்மைக்குப் பாதிப்பு இல்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
அபிஷேக் சவுபே இயக்கத்தில் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடித்த உத்தா பஞ்சாப் திரைப்படத்துக்கு 13 இடங்களில் வெட்டுடன் சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியது பெரும் சர்ச்சையாக வெடித்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் உத்தா பஞ்சாப் படத் தலைப்பிலிருந்து பஞ்சாப் என்ற வார்த்தையை நீக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் போதை மருந்து புழக்கம் தொடர்பான படத்திற்கான தலைப்பில் பஞ்சாப் என்ற வார்த்தையை மட்டும் நீக்குவது நியாயமாகாது.

இந்த படத்தில் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைக்கும் எவ்விதக் கருத்தும் இல்லை. ஒரு திரைப்படத்தின் கதைக்களம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் படைப்புச் சுதந்திரம் திரைப்பட இயக்குநர்களுக்கு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
மேலும், சென்சார் போர்டின் பணி படத்துக்குச் சான்றிதழ் வழங்குவதே தவிர, அதில் உள்ள காட்சிகளை வெட்டுவது அல்ல. இப்படம் வயது வந்தோருக்காக தயாரிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஒரு திரைப்பட இயக்குநருக்கு கட்டளையிடும் உரிமை சென்சார் போர்டுக்கு இல்லை எனவும் மும்பை உயர்நீதிமன்றம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications