போபாலில் மாஜி முதல்வர் உமாபாரதி ஆவேசம்.. மதுவிலக்கை வலியுறுத்தி மதுபான கடை மீது கல்வீச்சு
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மதுபான கடை மீது முன்னாள் முதல்வர் உமாபாரதி கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. அண்மையில் அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், வெளிநாட்டு மதுபானங்கள் மீதான கலால் வரியை 13 சதவீதம் வரை குறைத்து அறிவித்தார். மேலும் உள்நாடு, வெளிநாடு மதுபானங்களை ஒரே கடைகளில் விற்பனை செய்யவும் அனுமதி அளித்தது மத்திய பிரதேச பாஜக அரசு.

ஆனால் இதற்கு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதல்வருமான உமாபாரதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது அவரது கோரிக்கை. இதற்கான போராட்டங்களை நடத்தப் போவதாகவும் உமாபாரதி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் போபாலில் பர்கேடா பதானி என்ற பகுதியில் மதுபான கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி இருந்தனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அப்பகுதிக்கு உமாபாரதி சென்றார். ஏற்கனவே பலமுறை மதுபான கடையை மூடுவதாக வாக்குறுதி அளித்தும் நடைமுறைப்படுத்தவில்லை என்பதும் பொதுமக்கள் புகார். இதனால் தமது ஆதரவாளர்களுட்ன் அந்த கடைக்கு சென்ற உமாபாரதி கல்வீசித் தாக்குதல் நடத்தினார். இது தொடர்பான வீடியோவையும் தமது சமூக வலைதளப் பக்கத்தில் உமாபாரதி பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications